states

‘பாஜக-வுக்கு மீண்டும் வாக்களித்தால், அடுத்து வாக்களிக்கும் வாய்ப்பே மக்களுக்கு கிடைக்காது!’

புதுதில்லி, மே 22 - பாஜக-வுக்கு வாக்களித்தால், அடுத்து வாக்களிக்கும் வாய்ப்பையே மக்களுக்கு அவர்கள் தரமாட்டார்கள் என்று, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார். “2019 மக்களவைத் தேர்தல், நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டது”, என்றும், “இதன்மீது விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகள் பலர் சிறை சென்றிருப்பார்கள்” என்றும் அவர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். பீகார், ஜம்மு - காஷ்மீர், கோவா, மேகாலயா மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். பாஜக-காரரான இவர், தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில்தான், 2019-இல் பிரதமர் மோடி 2-ஆவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாக புல்வாமா தாக்குதல் குறித்து ஆழமான பல குற்றச்சாட்டுக்களை, கடந்த மாதம் முன்வைத்தார். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், ஞாயிறன்று நடைபெற்ற விழா ஒன்றில், பேசியிருக்கும் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து மீண்டும் அதே குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார். “தேர்தல்கள் (2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்) நமது ராணுவ வீரர்களின் உடல்கள் மீது நடத்தப்பட்டன. அதுகுறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் (ராஜ்நாத் சிங்) பதவி விலகியிருக்க வேண்டியிருக்கும். பல அதிகாரிகள் சிறை சென்றிருக்க வேண்டும். பெரிய சர்ச்சையே உருவாகியிருக்கும்.

புல்வாமா தாக்குதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று நடந்தது. அப்போது பிரதமர் மோடி, ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். அவர் அங்கிருந்து வெளியே வந்ததும் அவரிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் அவரிடம் நாம் செய்த தவறினால், நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினேன் அதற்கு அவர் என்னை அமைதியாக இருக்கும்படிக் கூறினார்” என மீண்டும் தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்தும் சத்யபால் மாலிக் பேசியுள்ளார்.  “வெறும் மூன்றே ஆண்டுகளில் அதானி அதிக அளவு சொத்துகளைச் சேர்த்துள்ளார். உங்களால் (மக்களால்) அவ்வாறு சேர்க்க முடிந்திருக்கிறதா? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் அதானிக்கு கிடைத்த ரூ. 20 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் பதில் அளிக்கவே இல்லை. இரண்டு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் பதில் இல்லை.

நான் கோவாவின் ஆளுநராக இருந்தபோது அம்மாநில முதல்வரின் ஊழல்கள் குறித்து பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். அதன் விளைவாக ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். முதல்வரோ அதே பதவியில் நீடித்தார். அதனால்தான் அவர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள், அதில் அவர்களுக்கு ஒரு பங்கு கிடைக்கிறது, மீதமுள்ள பணம் அதானிக்குச் செல்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே, அவர்களுக்கு (பாஜக-வுக்கு) நீங்கள் மீண்டும் வாக்களித்தால், அதற்கு பின்னர் உங்களால் எப்போதும் வாக்களிக்கவே முடியாது. அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பைத் தரமாட்டார்கள். எப்போதும் நாங்கள் தானே வெற்றி பெறுகிறோம், பிறகு எதற்கு தேர்தலுக்காக செலவு செய்ய வேண்டும் எனக் கேட்பார்கள். என் மீதான வழக்கு விசாரணைகளை கண்டு எல்லாம் நான் அஞ்சப் போவது இல்லை. உண்மையைத்தான் பேசுவேன்” என்று சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.