சென்னை, ஜன. 10- மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கரூர் கம்பெனி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து க.திருச்செல்வன் (டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், சிஐடியு), தனசேகரன் (தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏஐடியுசி), இராணியப்பன் (தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் ஏஐசிசிடியு), நந்தகோபால் (தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம்), பால் பாண்டியன் (அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்) ஆகியோர் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபுவை சந்தித்து செவ்வாயன்று (ஜன. 10) மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் லிமிடெட் (டாஸ்மாக் லிட்) நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 5,400க்கும் மேற்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. 38 மாவட்ட மேலாளர் அலுவல கங்களை கொண்டு செயல்படுகின்றன. மது பான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரி யும் ஊழியர்களை கரூர் கம்பெனி என்ற பெயரில் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் பணம் கேட்டு ஊழியர்களை மிரட்டுகின்றனர்.
இவருக்கு என்ன அதிகாரம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள கடை எண். 11725இல் கரூரைச் சேர்ந்த ரமேஷ், விற்பனை அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தவுடன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அந்த கடையை ஆய்வு செய்து உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஊழியர்கள் மீது சுமத்தி தற்காலிக பணி நீக்கம் செய்தது மட்டுமல்லாமல் கடையை மூடி யுள்ளார். அரசுக்கு சொந்தமான கடையை திறப்பதற்கும் மூடுவதற்கும் மாவட்ட ஆட்சி யருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான மாவட்ட மேலாளர் விஜயசண்முகம் மாவட்ட நிர்வாகத் திடம் அனுமதி பெறாமல் கரூர் கம்பெனி கும்பலுக்கு ஆதரவாக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சோதனையில் சிக்கியவர்
சமீபத்தில் விஜயசண்முகம் தங்கியிருந்த அறையில் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தற்போது கரூர் கம்பெனியை சேர்ந்த ஜெகதீசன், சந்தோஷ் ஆகியோர் திமுக ஒன்றிய செயலாளர்கள் மூலம் ஊழியர்களிடம் பணம் வசூலிக் கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பி.டி.ராஜா என்பவர் டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கரூர் கம்பெனி என்ற பெயரில் கார்த்திக் என்பவர் (கடை எண். 5538) மேற்பார்வையாளர் தொடர்பு கொண்டு விற்பனை அடிப்படையில் ஒரு விழுக்காடு கொடுக்க நிர்ப்பந்தம் செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தலை மையில் திலக், விக்கி, சஞ்சய், உமாசங்கர், பொள்ளாச்சி கார்த்திக், ரவி உள்ளிட்ட கும்பல் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்தும் மிரட்டல் வந்து கொண்டே இருக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் கரூர் கம்பெனி என்ற பெயரில் புகழ், சூர்யா, விஷ்ணு ஆகியோர் மாவட்ட மேலாளர் ரவிக்குமார் துணையுடன் ஊழியர் கூட்டங்களை நடத்தி தினசரி விற்பனை அடிப்படையில் பணம் கொடுக்க நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த தொழிற் சங்க நிர்வாகிகள் பணிபுரியும் கடைகளில் ஆய்வு நடத்தி பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரூர் கம்பெனியை சார்ந்த சதீஷ், ராமலிங்கம் ஆகியோர் அனைத்து கடைகளிலும் விற்பனையில் 10 விழுக்காடு கமிஷன் கேட்டு மிரட்டியுள்ளனர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கரூர் கம்பெனி கும்பல் உரிமம் பெறாமல் சட்டவிரோத மதுக்கூடங்களை நடத்தி வருகிறது. இந்த கும்பலுக்கு ஒத்து போகாத ஊழியர்களை பழி வாங்கும் விதமாக மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கடைகளை சட்டவிரோதமாக மூடியுள்ளார். இதுகுறித்து இரண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாக மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு கும்பல் வீதம் கரூர் கம்பெனி என்ற பெயரில் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை விபரங்களை டாஸ்மாக் அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு கடையாக நேரிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்டு பாட்டிலுக்கு ரூ. 2 வீதம் தர வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். இதற்கு உடன்படாத ஊழியர்களை அதிகாரிகள் துணையுடன் கடை ஆய்வு, கடையை மூடுவது, பணியிட மாறுதல் உள்ளிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஈரோடு, திருப்பூர், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரூர் கம்பெனியை சேர்ந்த கும்பல் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். மேலும் இந்த கரூர் கும்பல் உரிமம் இல்லாமல் மதுக்கூடங்கள் நடத்துவதால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் தலைமை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போது, ஊழியர்கள் நேரடியாக காவல்துறை யில் புகார் அளிக்க வேண்டும் என்று கூறுகின்ற னர். இத்தகைய அதிகாரிகளின் அணுகுமுறை யானது முழுக்க முழுக்க கரூர் கம்பெனி நபர்க ளுக்கு ஆதரவாக உள்ளது. அரசுக்கு சொந்த மான நிறுவனத்தில் கரூர் கம்பெனி என்ற பெயரில் சமூகவிரோத கும்பல் மாநிலம் முழுவ தும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய செயலானது சட்டத்தின் ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டி யுள்ளது. துறை அமைச்சரின் பெயரை பயன் படுத்தி கரூர் கம்பெனி என்ற பெயரில் செயல்படும் சமூக விரோதிகளால் டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே தாங்கள் கரூர் கம்பெனி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும், இந்த கும்பலை இயக்கும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள் ளவும், ஆளுங்கட்சி என்ற பெயரை பயன் படுத்தி ஊழியர்களை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பை வழங்கி தொழிலமைதியை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை தலைமை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.