சென்னை, ஜூலை 10- தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் என்.பழனிசாமி தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிச் செயலாளர் டி.காசிநாதன், மாநில பொருளாளர் டி.பி.கோபிநாத் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 30,000 விவசாயிகள் பாதிப்பு அம்பிகா, ஆரூரான், தரணி தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏழு சர்க்கரை ஆலைகளை நடத்தி வந்தன. இந்த ஆலைகள் 30000 கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 516 கோடி கரும்பு பாக்கி வைத்து விட்டு தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு சென்று விட்டனர். சித்தூர், திருமண்டகுடி - ஆரூரான் சர்க்கரை ஆலைகள் - 13824 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.102 கோடி கரும்பு பண பாக்கியும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று ஆரூரான் ஆலை எடுத்துக் கொண்ட ரூ.131 கோடி விவசாயிகள் பெயரில் கடனாக உள்ளது.
பென்னாடம், துகிலி-அம்பிகா சர்க்கரை ஆலைகள் 8619 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.171 கோடி கரும்பு பண பாக்கியும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று அம்பிகா சர்க்கரை ஆலை எடுத்துக் கொண்ட ரூ.158 கோடி விவசாயிகள் பெயரில் கடனாக உள்ளது. வாசுதேவ நல்லூர், சங்கராபுரம், போளூரில் உள்ள தரணி சர்க்கரை ஆலைகள் 7497 கரும்பு விவசாயிகளுக்கு ரூ.235 கோடி கரும்பு பண பாக்கி உள்ளது. ஆரூரான், அம்பிகா, தரணி நிறுவனங்களின் ஏழு சர்க்கரை ஆலைகள் ரூ.516 கோடி கரும்பு பண பாக்கியும் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொண்டு மோசடி செய்துள்ள ரூ.300 கோடியும் உள்ளது. இது கரும்பு விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளில் விவசாயிகள் புதிய கடன் வாங்க முடிவதில்லை, தேசிய கடன் தீர்ப்பாயம் ஆலைகள் மோசடி செய்த பணம் குறித்து கணக்கில் கொள்ளவில்லை, எஸ்.ஏ.பி பாக்கியை கரும்பு பண பாக்கியாக சேர்க்காமல் உள்ளனர்.
5 ஏ லாபப்பங்கு தொகை பாக்கியை கணக்கில் கொண்டு வரவில்லை, எப்.ஆர்.பி பாக்கிக்கு சட்டப்படி தர வேண்டிய 15 விழுக்காடு வட்டி தொகை கணக்கில் கொண்டு வரவில்லை. விவசாயிகளுக்கு சேர வேண்டி பாக்கித் தொகைகளுக்கு தீர்வு காணப்படாமலேயே கடன் தீர்ப்பாயம் ஆரூரான் சர்க்கரை ஆலையை ஏலம் விட்டுள்ளது. இந்த நிலையில் அம்பிகா, ஆரூரான், தரணி சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பண பாக்கி முழுவதையும் பெற்று தரவும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையை ஆலையின் பெயரில் மாற்றி விவசாயிகளை கடன் வலையில் இருந்து விடுவிக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அம்பிகா, ஆரூரான், தரணி சர்க்கரை ஆலைகளை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.
அரசுக்கு வரவேற்பு
மூடியுள்ள அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு ஆலை, என்.பி.கே.ஆர் ஆம்பூர் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புனரமைத்து திறந்து செயல்படுத்த மாநில அரசு ஆய்வுக்குழு அமைத்திருப்பதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே மாநில அரசு குழு அமைத்துள்ளது. போராடுகிற கரும்பு விவசாயிகளை விமர்சிப்பதை கைவிட்டு மாநில வேளாண்துறை அமைச்சர் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை வரும் ஆண்டில் 2022-23இல் திறந்து அரவை துவக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு மாநில அரசு பரிந்துரை விலையை (எஸ்.ஏ.பி.) அறிவித்து வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும், கரும்புக்கு வயல் விலையை தீர்மானித்து வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் -26,27 தேதிகளில் திருவண்ணாமலையில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.