states

தீக்கதிர் விரைவு செய்திகள்

முன்னதாகவே நிறைவுபெறும் நாடாளுமன்ற தொடர்!

புதுதில்லி, டிச. 20 - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டு இருந்தது. இந்த குளிர்கால கூட்டத்தொட ரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.  இதனிடையே, கிறிஸ்துமஸ், மற்றும்  ஆங்கில புத்தாண்டு வருவதால் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்ததாகவும், அதனடிப்படையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன் கூட்டியே டிசம்பர் 23-ஆம் தேதி முடித்துக் கொள்ள மக்களவையில் வணிக ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அறநிலையத்துறை கோயில்களை மீட்டு யாரிடம் ஒப்படைப்பது?

திருவாரூர், டிச. 20 - தருமபுர ஆதீனம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள், துவாக்குடியில் உள்ள திருநெடுங்கள நாதர் கோயிலுக்கு செவ்வாயன்று சென்றி ருந்தார். அங்கு அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.  சாமி தரிசனம் செய்த பின்னர் ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த தருமபுரம் ஆதீனத்திடம், இந்து சமய அறநிலையத்துறையிடம் கோயில்களை திரும்ப பெற வேண்டும் என்று ஒரு தரப்பு கோரிக்கை வைத்து வருவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள் ளது. அதற்கு, “கோயில்களை யாரிடம் ஒப்படைப் பது சொல்லுங்கள், அதை முதலில் முடிவு செய்யட்டும்” என்று பதிலளித்துள்ளார்.

ராம்தேவின் ஆன்லைன் யோகாவில் ஒளிபரப்பான ஆபாசப் படம்!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் பகத்ராபாத் கிராமத்திலுள்ள  பதஞ்சலி சுகாதார  ஆய்வு மையத்தில் ஆன்லைன் வழி யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாமியார் ராம்தேவின் பதஞ்சலி யோகபீட அமைப்பில் உள்ளவர்கள், இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் இந்த ஆன்லைன் யோகாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் திடீரென ஆபாச  படம் ஒன்றை ஒளிபரப்பி விட்டதாக கூறப்படுகிறது. யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட பலரும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளன. தற்போத இளைஞர் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

காஷ்மீரி பண்டிட்டுகளை ஒன்றிய அரசு பலியாடுகளாக ஆக்க வேண்டாம்!

“காஷ்மீரி பண்டிட்களுக்கு தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுக்கும் விவகாரத்தில் பிரதமர்  மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். உங்களால் காஷ்மீரி பண்டிட் களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், அவர்களை பலியாடுகளாக ஆக்காதீர்கள். காஷ்மீர் பண்டிட் பணியாளர்கள் திரும்பி வந்து பள்ளத்தாக்கில் பணியை தொடர கட்டாயப்படுத்தாதீர்கள். நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவேன். காஷ்மீர் பண்டிட் பணியாளர்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக காஷ்மீர் முஸ்லிம்கள் குரல் எழுப்ப  வேண்டும்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரு மான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

பிரதமர் மோடி - ஜின்பிங் சந்திப்பில் எல்லை விவகாரம் பேசப்பட்டதா? 

“இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஜி20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கும் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அப்போது, இந்திய - சீன எல்லை நிலவரம் குறித்து பேசப்பட்டதா? என்பதை அறிய விரும்புகிறேன். துணை மானியக் கோரிக்கையில், வடகிழக்கு எல்லைப்புற சாலைகள் அமைப்பதற்கு ரூ. 500 கோடி ஒதுக்குவதும் அடங்கி யுள்ளது. அதனடிப்படையிலேயே இந்த கேள்வியை நான் எழுப்புகிறேன். மோடியும், ஜின்பிங்கும்  என்ன பேசினார்கள் என்று என்னிடம் சொல்ல வேண்டாம். அவர்களது பேச்சில் எல்லை நிலவரம் இடம்பெற்றதா என்பதை மட்டும் அறிய விரும்புகிறேன். மேலும், இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு படைகளும் ரோந்து செல்லக்கூடாத பகுதிகளை அறிவித்து இருக்கிறீர்கள். இதற்கு, இதுவரை இந்திய படைகள் ரோந்து சென்ற பகுதியில் இனிமேல் ரோந்து செல்லாது என்று அர்த்தமா?  என்று அறிய விரும்புகிறேன்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

கர்நாடகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில், 2023 துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலை யில், மதச்சார்பற்ற ஜனதா தளம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 93 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். அதில், ராமநகர் தொகுதிக்கு, குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, சன்னபட்டணா தொகுதிக்கு குமார சாமி பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சாமுண்டேஸ்வரி தொகுதியில் ஜி.டி. தேவகவுடாவும், ஹுனாசுரு தொகுதியில் ஹரிஷ் கவுடாவும் போட்டியிடவுள்ளனர். இந்த பட்டியலில் ஹசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

சங்ககால- நவீன கால தமிழ் இலக்கியங்களை  பிரபலப்படுத்தும் நிகழ்வுகளை முன்னெடுத்திடுக : உயர்நீதிமன்றம்

மதுரை, டிச. 20-  தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் சங்க காலம் மற்றும்  நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு நடைபெற்றது. இதில் நீதிபதிகள் கூறுகையில், “தமிழ் மொழியை வளர்க்க  நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.  அதற்கு தேவை யான நிதியை ஒதுக்கி, சங்க கால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மனித உரிமைகள் ஆணையத்திற்கு  2 உறுப்பினர்கள்

சென்னை,டிச.20- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமனம் செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் செவ்வாயன்று (டிச.20) சட்டப்பேரவைத் தலைவர்  அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார். இதில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ மற்றும்  வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகி யோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தீவுத்திடலில் நாட்டிய விழா: சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு

சென்னை,டிச.20- சென்னை தீவுத்திடலில் நடை பெறும் நாட்டிய விழாவை சமூக வளை தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள சுற்றுலா வளர்ச்சி கழகக் கூட்டரங்கில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த ஆண்டு இந்திய நாட்டிய திரு விழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத் திடல்  ஆகிய இடங்களில் வருகிற 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 12 ஆம்  தேதி இந்த விழா முடிகிறது. இதில் பரதநாட்டியம், மோகினி யாட்டம், மணிப்பூரி, ஒடிசி, குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்பட பல்வேறு நடனங்கள், கிளாரி னெட், சாக்ஸபோன், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவி களின் இசையுடன் இணைந்து 63-க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் முழுவதையும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக  வலைதளங்களின் மூலம் நேரலையாக  ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை,டிச.20- தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.  இதன் காரணமாக டிச. 24 தேதி வரை 5 நாட்கள் தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்ப தால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஜன.4 இல் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை,டிச.20- ஒவ்வொரு ஆண்டும் சட்டப் பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரை யுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர், பொங்கலுக்கு முன்பே ஜனவரி முதல் வாரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.  இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை  நிகழ்த்துவார். அதில் அரசுத் திட்டங்கள் மற்றும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் குறிப்பிடுவார். திமுக அரசின் செயல் திட்டம் குறித்தும், அரசு நிறைவேற்ற இருக்கும் புதிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் உரையில் வெளியிடப்படும்.  இந்நிலையில், தமிழக அமைச் சரவை ஜனவரி 4 ஆம் தேதி 11 மணிக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்தும், கூட்டத்தொடரில் இடம் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்தும்  அமைச்சரவை கூட்டத்தில் ஆலோ சனை நடத்தப்படுகிறது.

மாதந்தோறும் மின் கணக்கீடு  எப்போது? அமைச்சர் விளக்கம்

சென்னை,டிச.20-  “ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக் கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், 50 ஆயிரம் புதிய  விவசாய இணைப்புகளை வழங்கு வது தொடர்பாக சென்னையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகத் தலைமை அலுவ லகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து  விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளி யிடப்பட்டது”என்றார். இதுவரை 1.70 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின்சார பயன்பாடு குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுப்பதற்கு ஏற்பத்தான் தற்போது பணியாளர்கள் உள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த ஒப்பந்தம் விடப் பட உள்ளது. எனவே ஸ்மார்ட் மீட்டர்  பொருத்தக்கூடிய பணிகள் முடி வடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது தற்போது உள்ள  தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.

ஸ்டார்பக்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

வாஷிங்டன், டிச.20- அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டார்பக்ஸ் அங்காடிகளில் பணிபுரி யும் தொழிலாளர்கள் மூன்று நாள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக் கிறார்கள். ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான காபிக் கடைகளை அமைத்திருக்கிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது நேர்மையற்ற நடவடிக்கைகளை நிர் வாகம் எடுத்து வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பல  முறை பேச முயற்சித்தும், நிர்வாகம் அசைந்து கொடுக்காததால் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க தொழிலா ளர்கள் முடிவெடுத்தனர். மூன்று நாள் வேலை நிறுத்தம் என்பது முதன்முறை யாக இந்தத் தொழிலாளர்கள் மேற்கொள் ளும் அதிக நாட்கள் கொண்ட வேலை நிறுத்தமாகும். இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்துக் கருத்து தெரிவித்த ஸ்டார்பக்ஸ் தொழிலாளர் சங்கம், “இன்று தொடங்கும் இந்த மூன்று நாள் வேலை  நிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கடைகளில் இருந்து வெளியேறு கிறார்கள். எங்களது போராட்டத்தில் இது வரையில் இல்லாத அளவுக்கு பெரிய  போராட்டமாக இது அமையப்போகிறது” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளது. சிதறிக் கிடந்த தொழி லாளர்களை ஒன்றிணைப்பதில் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரையில் இவ்வளவு பெரிய தொழிற்சங்கம் ஸ்டார்பக்சில் இல்லை. ஓராண்டில் சுமார்  270 கடை களில் நடந்த தொழிற்சங்கத் தேர்தலில்  வெற்றி பெற்று, கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேருக்கு மேல் ஒரே சங்கத்தில் உறுப்பினர் களாகியுள்ளனர். உள்ளூர் மட்டங்களில் சில அரசியல் தலைவர்களும் ஸ்டார்பக்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் ஆதரவும் தங்களுக்கு இருக்கிறது என்று தொழிற்சங்கம் தெரிவித்திருக்கிறது.