states

img

பேச்சு புல்லட் வேகம்... செயல் ஆமை வேகம்... - அ.பாக்கியம் ,சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்

கேள்வி: மோடி படாடோப விளம்பரத்துடன் அறிவிக்கும் புல்லட் ரயில் திட்டங்கள் என்ன நிலைமையில் உள்ளது? 

பிரதமர் மோடி ‘மும்பைக்கும் அகமதா பாத்துக்கும் புல்லட் ரயில் திட்டம் பற்றி’ புல்லட் வேகத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால் ‘ரயில் திட்டம் ஆமை வேகத்தில் கூட’ நகரவில்லை. இதுதான் மோடி அரசாங்கம் வாய்கிழிய, காது வலிக்க பேசி வரும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதை திட்டம். 2015 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக சர்வதேச ஏலத்தில் மோடி அரசு ஜப்பானுக்கு ஆதரவாக நிலை எடுத்து ஒப்படைத்தது. 2017 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு திட்டம் முடித்து ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். இதே காலத்தில் சீனாவின் ரயில்வே நிர்வாகம் இந்தோனேசியாவில் ஜாகர்த்தா - பாண்டுங் புல்லட் ரயில் திட்டத்தை ஒப்பந்தத்தில் எடுத்தது.

மும்பை - அகமதாபாத் ரயில் திட்டம் 508 கிலோமீட்டர் நீளம் உடையது. ஆனால் இதுவரை 10 கிலோமீட்டர் நீளம் கூட கட்டிமுடிக்கப்படவில்லை. திட்டம் 2015 டிசம்பரில் 108,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 80 சதவீத ஜப்பானிய நிதியுதவியுடன் எளிதான கடனாக அனுமதிக்கப்பட்டது. திட்டம் ஆமை வேகத்தில் நகர்ந்து வருவதால் திட்டச் செலவு ஒரு மடங்கு அதிகமாகி உள்ளது.  ஜிஎஸ்டி தவிர சிமெண்ட், எஃகு மற்றும் நிலம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால், 508 கிமீ நீளமுள்ள அதிவேக ரயில் திட்டம் சுமார் 1.67 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றும்,. திட்டம் முடிவடைவதற்குள் 2 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டு தான் திட்டம் முழுமையாக முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ இதே அளவு நீளமுடைய ரயில் பாதை  (453 கிமீ) திட்டத்தை 2015 ஆம் ஆண்டு சீனா எடுத்தது. 2022 ஆகஸ்ட் 4,  நிலவரப்படி, அதிவேக ரயில் பாதையின் அனைத்து சுரங்கப் பாதைகள் மற்றும் மதகுகள் நிறைவடைந்துள்ளன.  சிவில் பணிகள் 91 விழுக்காடு நிறைவடைந்தன. 2022 ஆகஸ்டில்  அதிவேக ரயில் பெட்டிகள் சீனா கிங்டாவோ தளத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டன. 2023 ஜூன் முதல்  இயக்கத்திற்கு வருகிறது.  இந்தோனேசிய அரசாங்கம் உலக ஜி 20 உச்சிமாநாட்டில் இந்த சீனாவின் அதிவேக இரயிலின் கட்டுமான திட்டம்  பற்றி முன் வைத்துள்ளது.  இத்தகைய உலகத் தரம் வாய்ந்த சர்வதேச மாநாட்டில் இந்தோனேசியா விளக்கக்காட்சி என்பது சீனாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தின் உலகளாவிய விளம்பரம் என்பதும், இந்தோனேசியா அதிவேக இரயிலில் திருப்தி அடைந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். இந்தியாவில் முதல் அதிவேக ரயில் திட்டமே 2028-ல் தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுக்கும் செயலுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.