புதுதில்லி, ஏப்.21- ஜஹாங்கீர்புரியில் வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களின் வீடுகளை ஆர்எஸ்எஸ்/பாஜக புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கிய சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின், தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விசுவ இந்து பரிஷத்-பஜ்ரங் தளம் கலவரம் விளைவிக்க முயற்சித்த போது அதனைத் தடுத்தவர்கள் எல்லாம் சட்டவிரோதமாகக் கட்டிடங்கள் கட்டியிருப்பவர்கள் என்றும் அவற்றை இடித்துத் தரைமட்டமாக்கிட வேண்டும் என்றும் பாஜக தில்லி மாநிலத் தலைவர் அதேஷ் குப்தா விடுத்த கட்டளையை அமல்படுத்தும் விதத்தில் பாஜக-வின் கீழ் இருந்துவரும் வடக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், அவற்றை இடித்துத்தள்ள முயற்சித்திருக்கிறது. இப்பகுதியில் மிகவும் வறிய நிலையில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு எவ்விதமான முன்னறி விப்பும் தராது அவர்களது வீடுகளை இரக்கமற்றமுறையில் இடித்துத்தள்ளி யுள்ளது. ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் தப்பிப்பிழைத்தவர்கள்மீது அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமாக ‘புல்டோசர் கலாச்சாரத்தை’ ஏவியிருக்கிறார்கள். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைக்கு தில்லிக் காவல்துறையும் அதிகமான அளவில் போலீசாரை அனுப்பி உதவி இருக்கிறது.
இந்நடவடிக்கைக்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வி. சுரேந்திரநாத், காங்கிரஸ் கட்சித் தலைவரும் வழக்குரைஞருமான கபில் சிபல் மற்றும் துஷ்யந்த் தவே ஆகியோருடன் உச்சநீதிமன்றத்தில் புதன் காலை 10.45 மணியளவில் மனு தாக்கல் செய்து, இந்நடவடிக்கையைத் தடுத்துநிறுத்திட வேண்டும் என்று கோரினார்கள். உச்சநீதிமன்றமும் தடை ஆணை விதித்தது. எனினும், பாஜக-வின் கீழ் இயங்கிடும் வடக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் அப்பகுதி மக்கள் திரண்டுசென்று, உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை உயர்த்திப்பிடித்து காட்டியபின்னரே, வடக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகமும், தில்லி காவல்துறையும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையை மதியம் 12.20 மணியளவில் நிறுத்தின. இவ்வாறாக ஆர்எஸ்எஸ்/பாஜக “புல்டோசர் கலாச்சாரத்தைத்” திணித்திடும் முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாலும், இதர ஜனநாயக சக்திகளாலும் முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஜஹாங்கீர்புரியில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் சுயதொழில் செய்பவர்கள். இவர்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக் கட்டும் விதத்தில் இந்நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். வரவிருக்கும் காலங்களில் தில்லியில் வாழும் அனைத்துக் குடிமக்களாலும் ஆர்எஸ்எஸ்/பாஜக மேற்கொண்டுவரும் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான மற்றும் ஜனநாயகவிரோதமான நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு நினைவுபடுத்திட விரும்புகிறது. இவ்வாறு கே.எம்.திவாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.