states

குறவன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதல்வருக்கு கோரிக்கை

சென்னை, மே 1- தமிழ்நாட்டில் உள்ள குறவன், குறவர் உள்ளிட்ட 26 பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தட்டரணை கிராமத்தைச் சார்ந்த மலைக்குறவன்  தங்கமணியின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். தங்கமணியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறவர்களாக பிறந்துவிட்ட காரணத்தால் அடித்து சித்ரவதை செய்து சாகடிப்பது, செய்யாத குற்றங்களை செய்ததாக ஒப்புக் கொள்ள வைத்து சிறை தண்டனை கொடுப்பது காவல்துறையில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாழும் மலைக்குறவரின மக்களுக்கு வருவாய்த்துறை சாதிச் சான்று உடனடியாக கொடுப்பதில்லை. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு அற்ற சமூகமாகவும் நிரந்தரமான வேலை இல்லாமல் வேதனையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே குறவன் இனத்தை சேர்ந்த மலைக்குறவன் பழங்குடி பட்டியலிலும் குறவன் தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் வாழ்கின்ற ஊர்களை வைத்தும், செய்கிற தொழில்களை கொண்டும் 26 பிரிவாக பிரித்து ‘கொறவர்’ டிஎன்சி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த 26 பிரிவுகளையும் பழங்குடி பட்டியலில் சேர்த்திட மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர் கருணநிதி, ஜெயலலிதா ஆகியோர் இரண்டு முறை பரிந்துரை செய்தனர். இதன் மீது இந்திய பதிவாளர் துறை அவ்வப்போது சில விளக்கங்கள் கேட்டு நீண்ட நெடுங்காலமாக பழங்குடி ஆராய்ச்சி மையத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழங்குடி சான்று பெற முடியாமல் லட்சக்கணக்கான குறவரின மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர்.  அரசு, அதிகாரிகள், காவல்துறையின் பொய் வழக்கு, சித்ரவதையை அனுபவித்து வரும் உண்மையான பழங்குடி மக்களாகிய தமிழ்க்குடி குறவன் மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.