பழனி, மே 10- தமிழக நிதி அமைச்சர் மே 7 அன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என தெரிவித்திருப்பது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது என்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அதன் பின்னரும் தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப் படும் என்று கூறி வருகிறார் .தமிழக அரசு சேராத நிலையிலும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை ஒரு பகுதியை கருவூல கணக்குத் துறையிலும் எல்ஐசியிலும் டெபாசிட் செய்துள்ளதாக நிதி அமைச்சரே கூறியிருந்தார். தற்போது முதலமைச்சரின் வாக்கு றுதிக்கு முரணாக பேசுவது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. முதல்வர் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும் . ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாத பஞ்சப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.