states

வயதான பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்

இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் சரிபாதி கல்வியறிவு அற்றவர்களாக உள்ளனர். மேலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்கு சென்றது இல்லை. அவர்கள் குடும்பத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். மேற்கண்ட தகவல்களை நாட்டின் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் நிலை குறித்து ஹெல்ப் ஏஜ் இந்தியா எனும் அமைப்பு வெளியிட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 14 புதன் அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 54 சதவீதமான பெண்கள் திருமணம் ஆனவர்கள். மற்றவர்கள் விதவைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களில் ஐம்பத்திரண்டு சதவீதம் பேர் அவர்களுக்கு நடக்கும் அவமரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தலை ஒப்புக்கொண்டனர். அவர்களில் 16 சதவீதம் பேர் உடல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.  பெண்கள் மற்றும் வயதானவர்கள் குறித்து ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பு தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட 20 மாநிலங்கள் தில்லி, சண்டிகர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் 7500 நபர்களிடம் ஆய்வுகள் மேற்கொண்டது. இந்த ஆய்வில் கருத்து தெரிவித்த கைம்பெண்கள் பெரும்பாலும் தாங்கள் பிறரை சார்ந்து இருப்பதாகவும் குறிப்பாக முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு கூட பிறரை சார்ந்து இருக்க வேண்டியச் சூழல் உள்ளது என்றும் தெரிவித்தனர். 

மருத்துவக் காப்பீடு

வயதானோர் பெரும்பாலும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களில் 64 சதவீதமான பெண்களுக்கு மருத்துவக் காப்பீடுகள் கூட இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  “2015- 2030 க்கு இடையில், உலகின் முதியோர் எண்ணிக்கை (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) சுமார் 56 சதவீதம் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.  தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், 24 சதவீத வயதான பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர். வயதான பெண்களின் நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப அடிப்படையிலான சுகாதாரத் தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது.  வயதான பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தை தவிர்க்க தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். பெண்கள், வயதாகும் போது, புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாமல் அலட்சியப்படுத்தப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை என ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் பிரசாத் கூறியுள்ளார்.