சார்... நம்ம ஊர்லருந்து யாருமே யூ ஜீனியஸ் போட்டிக்குப் போகலையாமே..
ஆமா.. நல்லா நடந்துச்சாம். செப்டம்பர்ல ஆரம்பிச்சு, போன மாசம் 4 ஆம் தேதியே முடிஞ்சுதே. இப்ப எப்புடி அதப் பத்தி கேக்குற.?
சார்.. நேத்து அப்பா பேப்பர்ல கட்டி சூடா வடை வாங்கிட்டு வந்தாரு.. அந்த எண்ணெய் பட்டதுல இந்த செய்தி பளிச்சுனு தெரிஞ்சுது..
பேப்பர்ல வெச்சு குடுக்கக்கூடாதுன்னு ஆணைலாம் போட்டாங்கள்ல சார்..
பேப்பர்ல இருக்குற அச்சு மையும் நம்ம வயித்துக்குள்ள போயிரும்னு ஆய்வுல தெரிஞ்சுது..
ஜீனியஸ் னா, நிறைய தெரிஞ்சுருக்கணுமா சார்..
அப்படி பலரும் சொல்றாங்க.. ஆனா, ஆய்வாளர்கள் கருத்து வேற மாதிரி இருக்கு..
அது என்ன சார்..?
புதுசா ஏதாவது கண்டுபிடிச்சாதான் ஜீனியஸ்னு அவங்க சொல்றாங்க..‘ புது கோட்பாடு, புது பொருள்... புதுசு, புதுசா கண்டுபிடிக்கணும்..
அப்புறம் எப்புடி இந்தப் போட்டி?
உங்கள மாதிரி குழந்தைகள உற்சாகப்படுத்துறதுக்குதான்..
ஏதோ பேங்க்தான் நடத்துச்சாமே சார்..
ஆமா.. யூனியன் பேங்க் ஆப் இந்தியா. இது அரசுடமையாக்கப்பட்ட வங்கி. இந்தியாவுல இருக்குற அரசு வங்ககள்ல அஞ்சாவது பெரிசு. 15 கோடிக்கு மேல வாடிக்கையாளர்கள் இருக்காங்களாம்.
நிறைய ஏடிஎம் இருக்கும்ல சார்
ஆமா... பத்தாயிரத்துக்கும் மேல..
அரசு வங்கினா என்ன சார்..
தனியார் நிதி நிறுவனங்கள் படுமோசமா இயங்கிட்டு வந்ததுனால நம்ம ஒன்றிய அரசு 1969ல ஜூலை மாசம் 19 ஆம் தேதி 14 தனியார் வங்கிகள அரசு உடமையாக்குனாங்க.. அப்போ இந்திரா காந்தி பிரதமரானாங்க.. மறுபடியும் ஆறு வங்கி 1980ல அரசு உடமையாச்சு. அப்பவும் இந்திரா காந்திதான் பிரதமரா இருந்தாங்க..
சார்... எங்களுக்கும் பேங்க்ல கணக்கு இருக்கு சார்..
ஆமா... தனியார்கிட்ட இருந்துருந்தா உங்களுக்கெல்லாம் கணக்கு திறந்துருக்க முடியுமான்னு தெரியல.. தனியார்னா லாபம் மட்டும்தான் பாப்பாங்க. அரசு வங்கிங்குறதுனால சமூகத்த பொருளாதாரத்துல இணைக்குற வேலையயும் செய்யுது. இதத்தான் சமூகக் கட்டுப்பாட்டுல நிதி நிறுவனங்கள் இருக்குறது நல்லதுனு சொல்றாங்க..
அப்போ இந்திரா காந்தி ஜீனியசா சார்... புதுசா ஒண்ணு செஞ்சுருக்காங்களே..
நிதி நிறுவனம்லாம் அரசுகிட்ட இருக்கணும்குறது புதுசு இல்லையே.. பிளாஸ்டிக் சாலை கேள்விப்பட்டுருக்கீங்களா..
கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனா பாத்ததில்ல. பிளாஸ்டிக்னா தமிழ்ல நெகிழிதான சார்..
ஆமா... இனிமே நானும் நெகிழினே சொல்றேன்.. இப்போ அத வெச்சு சாலை போடுறது அதிகமாயிட்டு வருது... தாருக்குப் பதிலா நெகிழியப் பயன்படுத்துறாங்க. நெடுஞ்சாலைகள்ல நெகிழியப் பயன்படுத்தி நல்லா வந்துச்சாம். அதனால மாநிலம் முழுக்க சாலைகளுக்கு பயன்படுத்தப் போறாங்களாம்..
யார் சார் முதமுதல்ல நெகிழி வெச்சு சாலையப் போட்டாங்க..?
நெதர்லாந்துல போட்டாங்க.. அத விட முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தத் தொழில்நுட்பத்த 2001ல ராஜகோபாலன் வாசுதேவன்னு தமிழ்நாட்டுக்காரர்தான் கண்டுபிடிச்சாரு.. அவரு அதோட நிக்கல..
அவர் விஞ்ஞானியா சார்..?
ஆமா... வேதியியல் பேராசியரும் கூட.. கழிவு மேலாண்மைல ஆய்வு பண்ணுன அவரு, நெகிழிக்கழிவுகள சாலைகளுக்குப் பயன்படுத்துற யோசனைய முன்வெச்சாரு... இப்போ இது பரவலா பயன்பாட்டுக்கு வந்துகிட்டு இருக்கு. மழைக்கெல்லாம் கூட தாக்குப் பிடிக்குதாம்.
இவர் ஜீனியசா சார்?
எவ்வளவு பெரிய புதிய கண்டுபிடிப்பு... இவர்தான் ஜீனியஸ். பொது வாழ்வுல சேவை செய்யுறவங்களுக்கு ஒன்றிய அரசு விருது கொடுக்கும். அதுல நாலாவது உயரிய விருது பத்மஸ்ரீ. இவருக்கு அதக் குடுத்துருக்காங்க..
நாங்க படிச்சுருக்கோம்... பாரத் ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன்... அப்புறமா பத்மஸ்ரீ..
ஆமா.. நீங்க இந்த மாதிரி போட்டிக்குப் போய் ஜீனியசாகுறீங்களா... இல்லேனா..
அவர் முடிப்பதற்குள், இல்ல சார்... புதுசா ஏதாவது கண்டுபிடிக்குறோம்..