states

தீக்கதிர் விரைவு செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது?

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி மாநாட்டை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்துப் பேசியுள்ளார். அப்போது, “குறுகிய சிந்தனையிலிருந்து கல்வியை உடைத்து அதை 21 ஆம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் இணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கருத்து. தேசிய கல்விக் கொள்கை தற்போது தாய்மொழியில் படிக்க வழி வகுத்துள்ளது. இந்த வரிசையில், சமஸ்கிருதம் போன்ற பண்டைய இந்திய மொழிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. ‘தேசியக் கல்விக்  கொள்கை’ இதுவரை இல்லாத பல சாத்தியக்கூறுகளை உணர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியை நமக்கு அளித்துள்ளது. நாம் அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கேரளாவில் தீவிரமடைந்தது தென்மேற்குப் பருவமழை!

கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  கண்ணூர், இடுக்கி மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் வியாழனன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை யில்: “கேரளாவில் ஜூலை 9-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுபோல கடற்கரை பகுதியிலும் சூறைக்காற்று வீசும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

மதத்தைப் பற்றி எதுவுமே சொல்லக் கூடாதா?

“மதத்தின் எந்த அம்சத்தை பற்றியும் யாரும் பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு நாம் வந்து விட்டோம். மஹூவா மொய்த்ரா யாரையும் புண்படுத்த முயற்சிக்கவில்லை என்பது வெளிப்படையானது, மதத்தை தனிமனிதர்கள் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்க விட்டு விட வேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். தீங்கிழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்கு நான் புதியவனல்ல, ஆனால், நமது வழிபாட்டு முறைகள் நாடு முழுவதும் வேறுபடுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் அறிந்ததை சொன்னதற்காக மஹூவா மொய்த்ரா மீது தொடுக்கப்படும் தாக்குதலால் இன்னும் அதிர்ச்சியடைந்தேன்” என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தானே கவுன்சிலர்கள் 66 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவு!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சி மற்றும் அக்கட்சியின் சின்னத்தையும் பறிப்பதில் தீவிரமாக உள்ளார்.  அந்த வகையில், தற்போது தானே மாநகராட்சியின் 66 கவுன்சிலர்கள் கூண்டோடு ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தானே மாநககராட்சி ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான தளமாகும். இதன்காரணமாக தானே மாநகராட்சி தற்போது மிக எளிதாக ஷிண்டே வசமாகியுள்ளது. இது உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தில்லி அரசுப் பள்ளி வகுப்பறைகளில் சிசிடிவி கேமிரா

தில்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என கடந்த 2019-ஆம்  ஆண்டு ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை அம்மாநில பொதுப்பணித்துறை தற்போது மேற்கொண்டுள்ளது. “தில்லியில் புதிதாக பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் வகுப்பறைக ளில் சிசிடிவி கேமிரா பொருத்தும் திட்டம் உள்ளது. இதனால் வகுப்பறையின் நேரடி காட்சிகளை பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன் மற்றும் கணினி வழியாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த நடவடிக்கை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு கற்பித்தல் முறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது” என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமலாகிவிடும்

“2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டில் செயல்படுத்தப்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் மேற்கு வங்கம் சென்றிருந்தபோது, “கொரோனா தொற்றுப்  பாதிப்பு முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம்” என உறுதியளித்தி ருந்தார். இதனைக் குறிப்பிட்டு அளித்த பேட்டியின்போதே “நாங்கள் (பாஜக) குடியுரிமைச் சட்டத்தை  அமல்படுத்துவோம் என்பது எங்கள் வாக்குறுதி” என்று சுகந்தா மஜூம்தார் கூறியுள்ளார்.

110 ஆண்டுகளில் காங்கிரஸ் இல்லாத உ.பி. சட்ட மேலவை

உத்தரப்பிரதேச சட்ட மேலவை கடந்த 1887-இல் தொடங்கப்பட்டது. 1909-இல் காங்கிரஸ் சார்பில் மோதிலால் நேரு முதல் சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) ஆனார். அதன்பிற கும் அந்த அவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தனர்.  ஆனால், சமீப ஆண்டுகளில் தொடர் தோல்வி காரணமாக காங்கிரஸ் எம்எல்சி-க்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. கடைசியாக சட்ட மேலவையில் காங்கிரசின் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது. இந்நிலையில், புதன்கிழமையுடன் அந்த ஒரு உறுப்பினரின் (தீபக் சிங்) பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 110 ஆண்டுகளில் முதன்முறையாக உ.பி. சட்ட மேலவையில் காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

லக்னோவிலும் அனுமனுக்கு 108 அடி உயர சிலை!

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் இந்துக்  கடவுள்களுக்கு சிலை வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனொரு பகுதியாக, குஜராத்தில் அனுமனுக்கு 108 அடி உயர சிலை நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து. தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலும் 108 அடி உயர அனுமன் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோமதி நதிக்கரையில் உள்ள தேவ்ரஹா காட் பகுதியில் உள்ள  400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது. “ஹரித்வாரின்  கங்கைக் கரையில் உள்ள சிவன் சிலையைப் போல, அனுமன் சிலை அமர்ந்திருக்கும் நிலையில்  இருக்கும்” என்று கோமதி பாபா என்று அழைக்கப்படும் அனுமன் கோயிலின் தலைவரான மஹந்த் ராம் சேவக் தாஸ் தெரிவித்துள்ளார்.