சென்னை,மே 2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தீக்கதிர் தலைமை பொதுமேலாளருமான எம்.என்.எஸ். வெங்கட்டராமன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி யின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் முன்னணித் தலைவர் தோழர் எம்.என். எஸ். வெங்கட்டராமன் (65) நேற்று (01.05.2022) இரவு மதுரையில், மாரடைப்பால் காலமா னார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி யுற்றோம். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் 1957ஆம் ஆண்டு பிறந்த, எம்.என்.எஸ். வெங்கட்டராமன் பள்ளிக்கல்வி முடிந்ததும் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து பொது வாழ்க்கையை தொடங்கியவர்.
விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வர்க்க அமைப்புகளின் வளர்ச்சிக்கும், விரிவுபடுத்தும் முயற்சிகளில் முனைப்பாக ஈடுபட்டவர். இதனைத் தொடர்ந்து கட்சியின் அருப்புக் கோட்டை இடைக்குழு செயலாளர், 1994 முதல் 2001 வரை கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் செயல் பட்டு, 2001 ஆம் ஆண்டில் மாநில செயற்குழு விற்கு தேர்வு செய்யப்பட்டு, அப்பொறுப் பில் இறுதி மூச்சு வரை சிறப்பாக பணி யாற்றி வந்தவர். தீக்கதிர் நாளிதழின் தலைமை பொது மேலாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தவர். மேதின நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மதுரை திரும்பிய நேரத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது ஆழ்ந்த வேதனையளிக்கிறது. கட்சி ஊழியர்கள் உடல் நலனிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும் என்பது படிப்பினையாகும். தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் மறை வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி, மகனுக்கும், மார்க்சிஸ்ட் தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எம்.எச்.ஜவாஹிருல்லா
சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தீக்கதிர் நாளிதழில் பதிப்பா ளர் தலைமை பொது மேலாளராகவும் பணி யாற்றி வந்த எம்.என்.எஸ். வெங்கட்டராமன், மார்க்சிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பில் இருந்தவர். கம்பத்தில் மேதின பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மதுரை திரும்பிய அவர் மாரடைப்பினால் மரணம் அடைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தோழமை உணர்வுடனும் அயராத உழைப்பும் கொண்ட எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அவர்களின் மரணம் பெரும் இழப்பாகும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்க ளுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வ தாக அவர் தெரிவித்துள்ளார்.