states

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இறுதி வரை போராடியவர் மா.ச. முனுசாமி

செங்கல்பட்டு, நவ. 18 - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும் இடதுசாரி தலைவருமான மா.ச. முனுசாமி ஞாயிறன்று (நவ.17) வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். அரசு சார்பில் மரியாதை திங்களன்று (நவ.18) தமிழ்நாடு சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மறைந்த ஆசிரியர் மா.ச. முனு சாமி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவராக திறம்பட செயல்பட்டார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஆசிரியர் சமூ கத்திற்காக அரும்பாடுபட்டவர். ஆசிரியர்களின் பல கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி அதில் பல வெற்றி களையும் கண்டுள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை எதிர்த்து இறுதி மூச்சு வரை போராடியவர். அவரது இறப்பு ஆசிரியர் சங்கத்திற்கு பேரிழப்பு என்றார். இதனைத் தொடர்ந்து திங்களன்று (நவ.18) தோழர் மா.ச. முனுசாமியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் ஆராய்ச்சி பணிகளுக்காக உடல் தானம் செய்யப்பட்டது. முதல்வர் இரங்கல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் மா.ச. முனுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மாநில ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவர் மா.ச.முனுசாமி மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆசிரியர் நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் அயராது பணியாற்றிய அவரது உழைப்பும் தொண்டும் ஆசிரியர் பெருமக்களால் என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.