லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம்!
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத், கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதில், லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது. உயர் சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமையன்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலுவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரின் மூத்த மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதி இன்று தெரிவித்து உள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லாலுவின் புகைப்படத்தையும் மிசா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் 27 உறுப்பினர்கள் பதவியேற்பு!
அண்மையில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 57 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 27 பேர், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் வெள்ளிக்கிழமையன்று முறையாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்தமுறை பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது. மாநிலங்களவையில் உள்ள 72 உறுப்பினர்கள் ஜூலை மாதத்திற்குள் ஓய்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிக்னேஷ் மேவானிக்கு செயல் தலைவர் பதவி
குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரசில் நிர்வாகிகள் மாற்றம், புதிய நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி உட்பட 7 பேர் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், இவர்களில் மேவானி மற்றும் லலித் காகதாரா, ருத்விக் மேக்வானா, அம்பரீஷ் ஜே டீர், ஹிமாந்த் சிங் பட்டேல் மற்றும் கதீர் பிர்சாடா, இந்திரவிஜயசிங் கோலி ஆகிய 5 பேர் எம்எல்ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டே-வுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசைக் கவிழ்த்த பாஜக, தற்போது அங்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே-வுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்து தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. இதனிடையே, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது; புதிய சபாநாயகர் நியமனம், புதிய முதல்வர் பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதுடன், ஜூலை 11-ஆம் தேதி நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கும் வருகிறது.
காஷ்மீரில் நடத்தப்படும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் கூட்டம் ராஜஸ்தானின் ஜூன்ஜூனு நகரில் வியாழனன்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நிர்வாகிகள் மன்மோகன் வைத்யா, அருண் குமார், கிரிஷன் கோபால் மற்றும் சி.ஆர் முகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2025-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவை காஷ்மீரில் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேலைதராமல் இளைஞர்களை ஏமாற்றுகிறது பாஜக
“ஒன்றிய பாஜக அரசு, வெற்றுப் பேச்சு பேசி இளைஞர்களை ஏமாற்றுகிறதே ஒழிய வேலை தர மறுக்கிறது. கடந்த 2022-இல் ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளில் மட்டும் 12 ஆயிரம் பேர், வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 30 லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளன” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கூச்சலிடுபவர்களை கண்டுகொள்ளாமல் செல்வோம்!
‘காளி’ தெய்வம் குறித்தான, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவின் கருத்துக்கு எதிராக சங்-பரிவாரங்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு வரும் நிலையில், மஹூவாவின் கருத்து தனிப்பட்டது; அதற்கும் தங்கள் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டு விட்டது. இதனிடையே, திடீரென திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மஹூவாவுக்கு மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளார். “வேலை செய்யும் போது நாம் தவறு செய்கிறோம். ஆனால் அவற்றை சரி செய்ய முடியும். சிலர் நல்ல வேலைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் திடீரென்று கூச்சலிடுகிறார்கள். எதிர்மறையானது மூளையின் செல்களை பாதிக்கிறது. அதனால் நேர்மறையாக சிந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
ஒற்றுமைக்கான செய்தி மோடியிடமிருந்து வருவதாக இல்லை
“தேசத்துக்கு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான செய்தியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் நாங்கள் பலமுறை வேண்டுகோள் விடுக்கிறோம், ஏனெனில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அவர் ஏன் அதை சொல்ல மறுக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. அவருக்கு இப்படி (பேசாதீர்கள்) என்று அறிவுரை கூறுவது யார்? அவர் (மோடி) வேண்டுகோள் விடுத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நான் நம்புகிறேன். ஆத்திரமூட்டப்பட்டாலும் நமது ஒழுக்கத்தை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ரெய்டால் சிவசேனாவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மக்களவை தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த்ராவ் விதோபா அட்சுல் சிவசேனா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக கருத்து கூறியிருக்கும் சஞ்சய் ராவத், “ஆனந்த்ராவ் ராஜினாமா செய்து விட்டார், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது, அவருடைய வீட்டில் ரெய்டு நடந்தது என்று அறிந்தேன். இந்த அழுத்தம் காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகி இருக்கலாம். இத்தகைய அழுத்தம் பல தலைவர்கள் மீது உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
12 மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 8- புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேட்டை சேர்ந்த கணேசன் (52), வைத்தியநாதன், ராமன் உள்ளிட்ட 5 பேரும், மயிலாடுதுறை மாவ ட்டம் சின்னங்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரா (27), தினேஷ் (26), தரங்கம்பாடியை சேர்ந்த ராமநாதன் (44), விக்னேஷ் (22), ெஜகதீஸ் , சந்தீஸ்குமார், பாக்கியராஜ் ஆகிய 12 மீனவர்களுக்கு ஒரே படகில் கடந்த 1 ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வேதாரண்யம் பகுதியில் தென்கிழக்கில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் படகு மற்றும் மீன்கள் உள்ளிட்ட பொருட்களை பறி முதல் செய்து, மீனவர்களை இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கட்சி தலைவர்களும் உடனடியாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து விடுதலையான தமிழகம் மற்றும் புதுவை மாநில மீன வர்கள் 12 பேரும் அங்கிருந்து சென்னை துறைமுகத்துக்கு வருகின்றனர். அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆசிரியர் தகுதி தேர்வு: தேதி அறிவிப்பு
சென்னை, ஜூலை 8- டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு)25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கணினி அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு எழுது வதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கணினி அடிப்ப டையிலான தேர்வுக்கான பயிற்சி தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதா ரர்களுக்கு தேர்வு தேதிக்கு 15 நாட்க ளுக்கு முன்னதாகவே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும் தேர்வு அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் தொடர்பான விவர ங்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வழங்கப்படும். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிகளுக்கு மறுநியமன தேர் வான போட்டித்தேர்வை வருகிற டிசம்பர் மாதம் நடத்த உள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர்கள், 3987 இடை நிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டி த்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து ள்ளனர். இந்த தேர்வுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டு உள்ளது.
நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு!
சென்னை,ஜூலை 8- திரைப்பட முன்னணி நடிகரான விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உரு வாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்தி ரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விக்ரம் சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.