states

இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்தரங்கில் கிஷோர் பேச்சு பாஜகவுக்கும் நிச்சயம் சரிவு ஏற்படும்

புதுதில்லி, மே 26- “இந்தியாவில் பாஜகவுக்கும் ஒருநாள் நிச்சயம் சரிவு  ஏற்படும்; ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதற்கு சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை’’ என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தின ராக பங்கேற்று உரையாற்றியுள்ளார்.  அதில் மேலும் அவர்  கூறியிருப்பதாவது: இந்திய அரசியலில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவாகியுள்ளது. இதனை யாராலும் மறுக்க முடியாது. எந்தவொரு விஷயமும் அல்லது கருத்தியலும் அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் சரிவை சந்திக்கும். இதுதான் விதி. எனவே, பாஜக-வுக்கும் இந்த நிலை ஏற்படும் என பலரும் கருதுகின்றனர். இதனை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்த விஷயம் இப்போது உடனே  நடைபெற்றுவிடாது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவின் சரிவானது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நடைபெறாது. அகில இந்திய அளவில் ஒரு கட்சியால் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற முடிகிறது என்றால், அக்கட்சி அவ்வளவு எளிதில் வலுவிழந்து விடாது.  இதன்மூலம், இனி வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜக-வே வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது என நான் கூறவில்லை. ஆனால், அடுத்த 20 - 30 ஆண்டு கள் பாஜகவை மையப்படுத்திதான் இந்திய அரசியல் சுழலும்.  இன்னும் சரியாக கூற வேண்டுமென்றால் நீங்கள் அடுத்த 20 - 30 வருடங்கள் பாஜகவை ஒன்று ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் எதிர்க்க வேண்டும். மாறாக அக்கட்சியை உங்களால் புறக்கணிக்க முடியாது. சுதந்திர இந்தியாவில் முதல் 40 ஆண்டுகள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது. அதேபோல்தான் தற்போது பாஜக உள்ளது.’’ இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.