சென்னை,பிப்.14- தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (பிப்.14) செய்தித் துறை விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- சென்னை போயஸ் தோட்ட பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா வசித்த இடமான ‘வேதா நிலையத்தை’ ஒரு நினைவு இல்லமாக மாற்றி அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதை மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஜெயலலிதா வீட்டின் சாவி வாரிசுதாரர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலை யில் அச்சட்டம் காலாவதியாகி விட்டதால் சட்டத்தை நீக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.