states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வடமாநிலத்தவர் விவகாரத்தில் வதந்தி பரப்பியது பாஜகவினர்தான்!

பாட்னா, மார்ச் 10 - “தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக எதுவும் நடைபெறவில்லை. யார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, யார் கைது செய்யப்பட்டுள்ள னர் (அனைவரும் பாஜகவினர்) என்பதை பாருங்கள். வதந்தியைப் பரப்பியது பாஜகதான். இது அவர் களது குணம். அரசியல் ஆதாயத்துக்காக இதைச் செய்கிறார்கள். அவர்கள் தவறு செய்கிறார்கள். ஆனால், நாட்டு மக்கள் அவர்களை அறிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

‘இந்துத்துவா ஈரானாக’ மாற்றும் பாஜக-வினர்

கர்நாடக மாநிலம், கோலார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனுசாமி. இவர் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுவினரின் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். அப்போது, நெற்றியில் பொட்டு வைக்காத பெண் ஒருவரைப் பார்த்து, “அறிவு இருக்கிறதா” என்றும், “உன் கணவர் இருக்கிறாரா? இறந்து விட்டாரா?” என்றும் பேசி சரமாரியாக திட்டியுள்ளார். தற்போது தமிழ்நாடு எம்.பி. கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். “பாஜக இந்தியாவை ‘இந்துத்வா ஈரானாக’ மாற்றி வருகிறது. இவர்கள், ‘நவீன காவலர்களாக’ இந்தியாவை கண்காணிப்பார்கள்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விவசாயி வீட்டு மருமகள்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி 

“விவசாயிகளின் மகன்களுக்கு யாரும் பெண் கொடுப்பது இல்லை என்றும், இதற்கு ஏதாவது வழி காண வேண்டும் என்றும் கோரி என்னிடம் விவசாயிகள் பலர் மனு கொடுத்தனர். கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். விவசாயிகள் நமக்கு உணவு வழங்குபவர்கள். அவர்களை நன்றாக வைத்து கொள்வது நமது கடமை. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி எவ்வளவு என்று கணக்கிட்டு அதை ஒதுக்குவேன்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

காங்கிரசில் இணைந்த புட்டண்ணா

20 வருட அரசியல் வாழ்க்கையில் பாஜக-வைப் போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் புட்டண்ணா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பாஜக சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா. இவருக்கான மேலவை பதவிக்காலம் 4 வருடங்கள் மீதமுள்ள நிலையில் “எதிர்பார்த்தது போல் எந்த மக்கள் பணியையும் பாஜக அரசின் மூலமாக செய்ய முடியவில்லை” என்று கூறி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது காங்கிரசில் இணைந்துள்ளார்.

மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரிக்க காரணம் யார்?

“கர்நாடகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு 1.29 கோடி பசு மாடுகள், எருமைகள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 1.15 கோடியாக குறைந்துள்ளது. 14 லட்சம் கால்நடைகள் எங்கே போயின? மறுபுறத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்திலுள்ள அரசு நிலங்களை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு, பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனால், நமது விவசாயிகளின் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு நிலம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார்.

‘எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்கு போவார்கள்’

“2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு எதிர்க்கட்சித் தலைவரையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை வளையத்தின் கீழ் பாஜக கொண்டு வந்து விடும். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சி அதிகாரத்தில் இருப்போர், எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் தள்ளினால், அவர்களைப் பயமுறுத்தினால், அவர்களை நிர்ப்பந்தத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம் என கருதுகிறார்கள். இந்திரா காந்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளினார். ஆனால் அதன் பின்னர் வந்த இடைத்தேர்தல்கள், பொதுத்தேர்தல் எல்லாவற்றிலும் அவரது கட்சி தோல்வியைத்தான் தழுவியது” என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

பசுக்களை ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில், பிரேம் சிங் (50) என்பவர் புதன்கிழமை யன்று தனது லாரியில் 13 பசுக்களுடன் மெயின்புரி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, லக்னோ அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 307-இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், எனினும், பிரேம் சிங் சுடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

உ.பி.யில் 6 ஆண்டுகளில் 178 பேர் சுட்டுக்கொலை!

உ.பி.யில் ஆதித்யநாத் ஆட்சியில், கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 178 பேர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். “குற்றங்களை குறைப்பதுதான் அரசின் வேலையே  தவிர, குற்றவாளிகளை சுட்டுக்கொல்வது மனிதநேயமற்ற நடவடிக்கை” என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், “உபியில் எந்த குற்றவாளிகளும் வேண்டுமென்றே கொல்லப்படவில்லை. போலீசாரை அவர்கள் தாக்கியதால் தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த சம்பவங்கள் நடக்கின்றன.  கடந்த 6 ஆண்டுகளில் ரவுடிகளுடன் நடந்த சண்டையில் 9 போலீசாரும் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்திருக்கின்றனர்” என்று முதல்வர் ஆதித்யநாத் கணக்கு காட்டியுள்ளார்.

‘பாஜகவுக்கு 40 தொகுதிகள்தான் கிடைக்கும்’

“கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக உள்கட்சி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இதில் முதலில் 136 இடங்களில் வெற்றி பெறுவதாக முடிவுகள் வந்தன. தற்போது இந்த தொகுதிகளின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் மாற்றம் என்பது துவங்கி உள்ளது. பாஜக-வுக்கு 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது. எனது தகவலின்படி, அவர்கள்  (பாஜக) 40 இடங்களுக்குள் வருவார்கள். முன்பு பி.எஸ். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவர்களுக்கு 40 இடங்கள் கிடைத்தது. விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் இந்த நேரத்தில் பாஜக 65 இடங்களுக்கு மேல் பெறமாட்டார்கள் என்பதையே பிரதிபலித்துள்ளனர்” என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இன்ப்ளூயன்ஸா காய்ச்சல்:  அடுத்தடுத்து 2 பேர் உயிரிழப்பு

பெங்களூரு, மார்ச். 10- ப்ளூ என அழைக்கப்படும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பரவல் வேகம் இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மிக குறுகிய காலகட்டத்தில் 90 பேர் இன்ப்ளூயன்ஸா (எச்3என்2) வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் 82 வயதான ஹிரே கவுடா வும், ஹரியானா மாநிலத்தில் ஒருவரும் என 2 பேர் இன்ப்ளூ யன்ஸா தொற்றால் உயிரிழந்துள்ளனர். “ஹாங்காங் காய்ச்சல்” என அழைக்கப்படும் இன்ப்ளூ யன்ஸா வைரஸ் பல வகையில் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை எச்3என்2, எச்1என்1 என இருவகை தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இதில் எச்3என்2 தொற்று நாட்டில் பரவலாக காணப்பட்டு வரும் நிலையில், தொடர் இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஆகியவை எச்3என்2 அறிகுறி களாக உள்ளன. மேலும் குமட்டல், தொண்டைப் புண், உடல் வலி, வயிற்றுப்போக்கும் இருப்பதாகவும்,அறிகுறிகள் சுமார் ஒரு வாரம் நீடிக்கும் எனவும்  தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவி மரணம்:  ரூ.3 லட்சம் இழப்பீடு  வழங்க உத்தரவு

சென்னை, மார்ச் 10- அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்டு மரணமடைந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், மேற்கு கிராமத்தில் உதக மண்டலம் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் கடந்த மார்ச் 6 அன்று 6 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப் பட்டனர் என்றும், இவர்களில் 4 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் ஜெய்பா பாத்திமா என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரி ழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாசஜியா, ஆயிஷா, குல்தூண் நிஷா ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரி ழந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மாநகரப் பேருந்து தனியார் மயம் இல்லை

சென்னை,மார்ச் 10- சென்னையில் தனியார் பேருந்து கள் இயக்கம் தொடர்பாக முதல்வருக்கு  கடிதம் எழுதிய 9 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை  நடத்தினார். பின்னர் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த அவர் கூறுகை யில், “சென்னையில் மாநகர போக்கு வரத்து தனியார் மயமாக்கப்படாது. புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்து களின் பராமரிப்பு பணி மட்டுமே தனியார் வசம் ஒப்படைக்கப்படும்”என்றார்.

ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? பேரவைத் தலைவர் கேள்வி 

சென்னை,மார்ச் 10- ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால்தான் ஆன்லைன் ரம்மி சட்டத்தை திருப்பி அனுப்பும் நிலைப்பாட்டை எடுத்திருப்பார் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமை செயலகத்தில் வெள்ளியன்று (மார்ச்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி அவசர சட்டத்திற்கும், சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்று தெரியவில்லை.  ஆளுநர் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர், அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநரின் உரிமை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம், விளக்கம் கேட்கலாம், திருப்பி அனுப்பலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டம் கொண்டுவர, சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என எந்த சட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் கூறினார் என்று தெரியவில்லை.   சட்டமன்றம் மக்களால் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு களங்கம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். இந்த சட்ட முன்வடிவை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று கொண்டு வரவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்துதான் இது கொண்டு வரப்பட்டது. இதை எல்லாம் ஆளுநர் பார்த்திருக்க வேண்டும். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு எதிராக உள்ளார். எங்கிருந்து, என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி நடத்தக் கூடியவர்கள் ஆளுரை சந்தித்தார்கள் என்று செய்திகள் வந்தன. அதில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால் இந்த நிலைப்பாடு எடுத்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செவித்திறனை மீட்டு கியூபா சாதனை

ஹவானா, மார்ச்  10 - உட்செவிச்சுருள் வைப்புத் திட்டத்தின் கீழ் கியூபாவில் ஏராளமானோருக்கு அவர்களின் செவித்திறனை மீட்டுத்தந்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த உட்செவிச்சுருள் வைப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. கியூபாவில் மற்ற நாடுகளை விட உயர் தொழில் நுட்பமும், துல்லியமான முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் திறனும் இருக்கிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரையில் இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஹவானாவில் மையப் பகுதியில் உள்ள பெட்ரோ போர்ராஸ்-மார்ஃபன் மருத்துவமனைக்கு அன்றாடம் ஏராளமானோர் செவித்திறன் சிகிச்சைக்காக வருகிறார்கள். புரட்சி நடந்ததில் இருந்தே கியூபா செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. பலரும் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். பெட்ரோ போர்ரஸ்-மார்ஃபன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவரான லியாண்ட்ரா மோரினோ, “எனக்கு பிடித்தமான பாடல்களைக் கேட்க முடிகிறது. மழையின் சத்தம் காதில் விழுகிறது. என்னுடைய நண்பர்களுடன் வெளியில் செல்கிறேன். இவையெல்லாம் இந்தத் திட்டத்தின்கீழ் கிடைத்த சிகிச்சையால்தான் சாத்தியமானது” என்கிறார். இந்த சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை இறக்குமதி செய்ய கியூபா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அந்தத் தடைகளை மீறி மக்களுக்கு இந்த செவித்திறன் குறைபாடு சிகிச்சையை கியூபாவின் மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். சிகிச்சையைப் பெற்ற பலரும் தங்கள் திறனை மீண்டும் பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த முயற்சியால் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பெறுவதில் கியூபா வெற்றி கண்டுள்ளது.