சென்னை,மே 8- தமிழகத்தில் தொடர்ந்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, மே 8 ஞாயிறன்று 1 லட்சம் மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய தகுதியானவர்களை கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நினைவூட்டல் சீட்டு வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினர், மக்களை தேடி மருத்துவக் குழுவினர் மற்றும் தெற்கு ரயில்வே சார்ந்த அதிகாரிகள், ஊழியர்களை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள் தடுப்பூசி போட தகுதியானவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அந்தவகையில் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சென்ற மக்கள் பலர், தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.