டமாஸ்கஸ், ஜூன் 7- எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் சிரியாவின் சில பகுதிகள் மீது இஸ்ரேல் செலுத்திய ஏவுகணைகளை மறித்து அவற்றை சிரிய ராணுவம் தகர்த்து எறிந்துள்ளது. இஸ்ரேல் நடத்திய திடீர் ஏவுகணைத் தாக்குதலை சிரிய அரசு செய்தி நிறுவனமான சனா தனது செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதியன்று இரவில் நடத்திய இந்தத் தாக்குதலில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு தகர்க்கப்பட்டன. சில ஏவுகணைகள் எதிர்த்தாக்குதல்களை மீறி விழுந்தாலும் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. இதுவரையில் இல்லாத அளவிற்கு எதிரித்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சிரியாவின் ராணுவத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. “இரவு 11.18 மணிக்கு எதிரிகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தினார்கள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோலன் மலைப்பகுதியில் இருந்து இந்தத் தாக்குதல்கள் நடந்தன. தலைநகர் டமாஸ்கசுக்கு தெற்கில் உள்ள சில பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. எதிரிகளின் இந்த ஏவுகணைகள் எங்கள் பாதுகாப்புப் பிரிவுகளால் எதிர்கொள்ளப்பட்டன. எதிரிகள் வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவை தகர்க்கப்பட்டன” என்று சிரிய ராணுவ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சுயேச்சையான செய்தி நிறுவனங்களும் இந்தத் தாக்குதல்களையும், எதிர்த்தாக்குதலைகளையும் உறுதி செய்கின்றன.
இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் சில பகுதிகளைக் குறிவைத்ததோடு நிற்கவில்லை. ஒரே வேளையில் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இயங்கி வரும் சில பகுதிகளையும் குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிரியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ஆதரவோடு இயங்கி வரும் தக்பிரி பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு தருவதில் இஸ்ரேல் முன்னணியில் நிற்கிறது. அதேவேளையில், அந்த பயங்கரவாதக் குழுக்களை எதிர்கொள்வதில் சிரியாவுக்கு பெரும் துணையாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் அவர்களையும் இலக்காக வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. சட்டவிரோதமாக இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையில் பல முறை சிரியா முறையிட்டுள்ளது. ஐ.நா.சபை கண்டித்தாலும், அமெரிக்காவின் ஆதரவு இருப்பதால் கண்டனங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.