states

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு

திருவாரூர், ஜூன் 12- இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25, 26, 27 தேதிகளில் திருவாரூரில் நடத்துவதென சங்கத்தின் மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளோடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை திருவாரூரில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.ஹரி சுர்ஜித் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர். மாநில செயலாளர் வீ.மாரியப்பன் பேசுகையில், “மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் விதமாக ஆளும் அரசுகள் பல நிலைகளில் நுழைவுத் தேர்வுகளை திணிக்கின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாக மாறுவதோடு, இட ஒதுக்கீட்டு கோட்பாட்டையும் புறந்தள்ளி சமூகநீதிக்கு வேட்டு வைக்கிறது.  ஒன்றிய அரசு தனது மதவெறி திட்டங்களோடு பல்கலைக்கழகங்களில் தலையீடு செய்கிறது. பாடத்திட்டங்களில் மத வெறுப்பையும் மனு தர்மத்தையும் நுழைத்து மாணவர்களை பிளவுபடுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்களில் பாலின சமத்துவ சிந்தனையை வளர்த்து, பாலியல் சீண்டல்களிலிருந்து மாணவிகளை பாதுகாக்க வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. இவை தொடர்பாக விவாதிக்கிற மாநாடாக இம்மாநாடு அமையவிருக்கிறது” என்றார்.  இக்கூட்டத்தில் 101 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்புக்குழுவின் தலைவராக, சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன், செயலாளராக ஆனந்த், பொருளாளராக டி.முருகையன் மற்றும் ஆறு துணை செயலாளர்களும், ஆறு துணை தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.