சென்னை, ஜூலை 14- எஃகு, மணல், சிமென்ட் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வால், அடுத்த காலாண்டில் (அக்டோபர்) இருந்து, மாநகரில் வீட்டுமனை விலை 15 விழுக்காடு உயரக்கூடும் என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் (கிரெடாய்) சென்னை பிரிவின் தலைவர் சிவகுருநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது : கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரு டன் எஃகு விலை கிட்டத்தட்ட 65 விழுக்காடு மற்றும் செங்கல் விலை 200 விழுக்காடு அதிகரித்துள்ளது, என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் அறிமுகம் எதுவும் நடைபெறாததால், சென்னையில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஆகக் குறைந்துள்ளது. வட்டி விகிதங்களையும் வங்கிகள் உயர்த்தி வருகின்றன. முன்பு வங்கிகள் வழங்கிய 6 விழுக்காடு வீட்டுக் கடன் இப்போது கிட்டத்தட்ட 8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் வீட்டுக் கடன்களை உயரும். வீடு மனைகள் தொடர்பாக பிரச்சனை எழுந்தால் 30 முதல் 60 நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என்பதால், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திற்குச் செல்வதை விட நுகர்வோர் நீதி மன்றத்தின் மூலம் கட்டுமான நிறுவனத்துடனான பிரச் சினைகளைத் தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார். பிரீமியம் எஃப்எஸ்ஐ மீதான ஜிஎஸ்டி யை கிரெடாய் எதிர்க்கும். வீடுகள் மனைகள் விலைஉயரும் போது அதில் வீட்டு வசதி வாரியத்தின் மனைகளும் வீடுகளும் அடங்கும் என்றும் சிவகுருநாதன் தெரிவித் தார்.