states

img

விதிமீறல் கட்டடங்கள்: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை,டிச.31- விதிமீறல்கள் செய்து சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரி களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்டட வீதிமீறல் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சாந்தி என்பவருக்குச் சொந்தமான கட்டடத்திற்கு சீல் வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி யிருந்தது. அந்த நோட்டீஸ்க்கு மனுதாரர் அளித்த விளக்கத்தை மாநகராட்சி நிராகரித்தது. இதை எதிர்த்து அரசுக்கு மறு ஆய்வு மனுஅளித்த நிலையில், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு, அரசிடம் அளித்த  மறு ஆய்வு மனுவை பரிசீலிக்க உரிய நேரம் வழங்க வேண்டும், அவ்வாறு நேரம் வழங்காமல் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் சென்னை மாநகரம் விதிமீறல் கட்டடங்களால் கான்கிரீட் காடாக மாறிவிட்டது என்றும், இதன் காரணமாக நகரம் மழைக் காலங்களில் வெள்ள பாதிப்புகளை சந்திப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததால் அண்டை வீட்டார் மட்டுமல்லாமல் பொதுமக்களும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், வீதிமீறலில் ஈடுபடு வோருக்கு உடந்தையாக செயல்படுகின்றனர் என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.