states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு மே 15 வரை விண்ணப்பிக்கலாம்!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. மே 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய தேர்வு முகமை மே 15 வரை நீட்டித்துள்ளது. மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

உஸ்மானியா பல்கலை.யில் ராகுலுக்கு அனுமதி மறுப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மே 7-ஆம் தேதி, தெலுங்கானாவின் மிகவும் பிரபலமான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி, ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்எல்ஏ பால்க சுமன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, ராகுல்காந்தி உரையாற்ற உஸ்மானியா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ளது.

பொது சிவில் சட்டம்தான் நாட்டுக்கு இப்போது முக்கியமா?

நாட்டில் உள்ள பல்வேறு சமுதாய மக்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை தேவையில்லை. பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மின்தட்டுப்பாடு நிலவுகிறது. நிலக்கரியை கொண்டு செல்வதற்காக பயணிகள் ரயில்கள் இந்த வாரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி கண்டு கொள்ளாமல், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. நம் நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

விலைவாசி, வேலையின்மையே நாட்டின் பிரச்சனை

மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்றால், அவை பணவீக்கம், உணவு மற்றும் வேலையின்மைதான். ஆனால் யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை. அனுமன் சாலிசாவை கோஷமிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுபோன்றவற்றால் என்ன பயன்? மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு இதுதான் தீர்வா? என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இவ்வாறு சாதி, மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்வோருக்கு எதிராக, ஷாகு மகராஜ் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் மக்கள் செல்ல வேண்டும் என்றும் பவார் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் சுயநினைவில் இருப்பதாக தெரியவில்லை

“நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற தீவிரமான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஒலிபெருக்கிகள் மற்றும் புல்டோசர்கள் பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. மதம் மற்றும் கர்மாவின் சாரத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தேவையற்ற பிரச்சனைகளுக்கு மதச் சாயம் பூசுகிறார்கள். சுயநினைவு கொண்டவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்” என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி விமர்சித்துள்ளார்.

பிடிஓ-வைத் தாக்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ கைது!

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள திலீபானி பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணா சந்திர தல்படி. இவர் 2 நாட்களுக்கு முன்பு, பாலியகுடி கிராமத்திற்கு பள்ளி வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக-வின் தியோகர் தொகுதி  எம்எல்ஏ சுபாஷ் சந்திர பாணிகிரஹியும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணா சந்திர தல்படியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, பாஜக எம்எல்ஏ சுபாஷ் சந்திர பாணிகிரஹி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து என்பது மதத்தை விடவும் மேலானது!

“நமது நாடு அறிவு பூமி என்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதனை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒரு போதும் கட்டுப்படுத்தக் கூடாது. இந்து என்பது ஒரு மதத்தை விட மேலானது. அது ஒரு புவியியல் அடையாளம்.  இமயமலைக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள்” என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே ஹைதராபாத்தில் பேசியுள்ளார்.

உ.பி. கோயில், மசூதிகளில் 54 ஆயிரம் ஒலிபெருக்கிகள் அகற்றம்!

“உ.பி. மாநிலத்தில் மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் இருந்து இதுவரை 53 ஆயிரத்து 942 ஒலிப்பெருக்கிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும், 60 ஆயிரத்து 200 ஒலிப்பெருக்கிகளின் ஓசையளவைக் குறைத்துக் கட்டுப்படுத்தியுள்ளோம். பெரேலி பகுதியில் மட்டும் 16 ஆயிரத்து 682 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மேலும் 17 ஆயிரத்து204 ஒலிப்பெருக்கிகளின் ஓசை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன” என்று ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தெரிவித்துள்ளது.