states

கர்நாடக மாநில எஸ்ஐ தேர்வில் ரூ. 210 கோடி ‘மெகா’ ஊழல்!

பெங்களூரு, ஏப். 21 - கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற  காவல்துறை சார்பு-ஆய்வாளர் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  ரூ. 210 கோடி அளவிற்கு மதிப்பிடப் படும் இந்த ஊழலில்  குல்பர்கா பகுதி  பாஜக மகளிர் அணி தலைவி திவ்யா  ஹகரகி சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற போலீஸ் பணி நியமன விவகாரத்தில் ரூ. 210 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் அமைச்சர்களுக்கும், பாஜக-வினருக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தப் பின்னணியிலேயே குல்பர்கா பகுதி பாஜக தலைவர் திவ்யா  ஹகரகி இந்த ஊழலில் சிக்கி யுள்ளார். அவர் தலைமறைவாகி விட்ட  நிலையில், திவ்யாவின் கணவர் ராஜேஷ் ஹகரகி உட்பட 6 பேரை போலீ சார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் சிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக மாநில பாஜக அமைச்சரான அரக ஞானேந் திராவே உறுதிப்படுத்தி உள்ளதுடன், குல்பர்கா பாஜக தலைவர் திவ்யா-வின்  கணவர் ராஜேஷ் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். பாஜக தலைவர் திவ்யா ஹகரகி அந்தப் பகுதியில் ஞானஜோதி என்ற ஆங்கிலப் பள்ளி நடத்தி வருவதாகவும், அவரது பள்ளி வளாகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வுகள் நடந்தபோதுதான் முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. திவ்யா ஹகரகி யின் வீட்டில் சிஐடி டிஒய்எஸ்பி சங்கர கவுடா தலைமையிலான குழுவினர் சோதனையும் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து, திவ்யா ஹகரகி தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரைதேடும் பணி நடந்து  வருகிறது. திவ்யாவின் கணவர் ராஜேஷ்  மட்டுமன்றி, இந்த புகார் தொடர்பாக, 4 விண்ணப்பதாரர்கள்,  மூன்று மேற்பார்வையாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள திவ்யா ஹகரகி முன்பு கல்புர்கி மாவட்ட பாஜக வின் மகளிர் மோர்ச்சா மாவட்டத் தலைவ ராக இருந்தவர். தற்போதும் கூட, திஷா  கமிட்டி மற்றும் கர்நாடக நர்சிங் கவுன்சில் உறுப்பினராகவும், கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உள்ளார்.  உள்ளாட்சித்துறை ஊழல் தொடர்பாக பாஜக அமைச்சர் கே.எஸ்.  ஈஸ்வரப்பா பதவி விலகிய நிலையில், அடுத்ததாக தற்போது ரூ. 210 கோடிக்கான காவல்துறை ஊழலிலும் பாஜக பிரமுகர் சிக்கியுள்ளார்.