states

தமிழ் கட்டாய பாடச் சட்டம் தொடர்பான வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை,டிச.21- ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை  தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தி யது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “தமிழகத்தில் தமிழ் மொழி யைக் கட்டாயமாக்கி 2006 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08  ஆம் ஆண்டு  முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு  ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார்  

தெரிவித்துள்ளன. 2015-16 ஆம் கல்வி யாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட பாடத் திட்ட பள்ளிகளில் 10 ஆம்  வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம்  படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில  மொழிகளைக் கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவு கள் உள்ளன. தமிழ் கட்டாய பாடச்  சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும்  இல்லை. இதனால் இந்த சட்டத்தை கண்டிப்பு டன் அமல்படுத்த முடியவில்லை. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022 ஆம்ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47 ஆயிரத்து 55 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, தமிழ் கட்டாய பாடச் சட்டம் அனைத்து பள்ளி களிலும் அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக  அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.