states

img

அரசு நிலங்களில் வசிப்போருக்கு குடிமனைப் பட்டா வழங்கு மதுரவாயல் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 21 –

   அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, நில வகைமாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க கோரி ஞாயிறன்று (மே 20) மதுரவாயல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது.  

   மதுரவாயல் பகுதி மக்கள் நீண்டகால மாக எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மே 20ந் தேதி தொடங்கி ஒரு வார காலம் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதனை  கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் ஆழ்வார் திருநகரில் தொடங்கி வைத்தார். குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியுள்ள நிலங்களை வகை மாற்றம் செய்து விற்பனை பத்திரம் வழங்க வேண்டும்.

  சமய நிலங்களில் குடியிருப்போருக்கு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 34-ன்படி குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். வீட்டுவரி மறுசீரமைப்பு செய்து, சென்னையின் மையப் பகுதியில் உள்ளதைப்போல் புறநகர்ப் பகுதிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

   போரூர் அரசு மருத்துவமனையை 100 படுக்கை கொண்டதாக கொண்டதாக மேம்படுத்த வேண்டும்.  பாதாள சாக்கடை அமைக்கும் பணி களை விரைந்து முடிப்பதோடு, விடுபட்ட இடங்களிலும் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மதுரவாயல் தொகுதிக்குள் ஒரு அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும். வானகரம், அயப்பாக்கம், அடையாளம் பட்டு ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும்.

  மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி, அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்; விடுப்பட்ட தெருக்களில் கால்வாய்களை அமைக்க வேண்டும். குழாய், லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரை தினசரி வழங்க வேண்டும்; அனைத்து தெருக்க ளிலும் குடிநீர் தொட்டி வைக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றி, புதை வடிவமாக மாற்ற வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். 800 குடும்ப அட்டைக்கு ஒரு நியாய  விலைக் கடை என்ற அரசின் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்து பொருட்களையும் அனைத்து நாட்களிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பள்ளி, கோவில், ரேஷன் கடை ஆகியவற்றிக்கு அருகாமை யில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த இயக்கம் நடை பெறுகிறது. கட்சியின் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.குமரகுருபரன், ஆர். பாலசுப்ரமணியம், கே.ரமேஷ், கிளை செயலாளர்கள் ஜி.பார்த்தசாரதி, ஏ.எம்.புகழேந்தி, எஸ்.சித்ரா, எம்.எஸ்.ராஜேந்திரன், எம்.ராஜா, ஜி.ஜானகிராமன், ஜி.சாந்தி, ஆர்.ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.