states

img

கோதாவரி பருலேகரும் சுபாஷ் முண்டாவும்!

சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக செங்கொடி இயக்கம் நாடு முழுவதும் ஆதிவாசி மக்களின் விடுதலைக்காகவும், அவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், பொருளாதார சுரண்டலுக்கு எதிராகவும், பெண்கள் மீதான நிலப்பிரபுக்களின் கொடூரமான பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் வீரமிக்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது. அதில் மாபெரும் வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. இந்திய வரலாற்றில் ஈடுஇணையற்ற தெலுங்கானா புரட்சியில் பழங்குடி மக்களின் பங்கு மகத்தானது. மகாராட்டிஷ்ரா வொர்லி ஆதிவாசிகளின் எழுச்சி ஒரு வீர காவியமாகும். 1945 அக்டோபர் 10, பழங்குடி மக்களின் தாய் என்று போற்றப்பட்ட தோழர் கோதாவரி பருலேகர் அவர்களை நிலப்பிரபுக்கள் தாக்கப் போகிறார்கள்; எனவே, அவரை பாதுகாக்க ஆதிவாசிகள் திரண்டு வரவேண்டுமென்று செங்கொடி சொல்லி இருக்கிறது என்ற பொய்ச் செய்தியை நிலப்பிரபுக்களே பரப்புகிறார்கள். இதைக் கேட்டு அனைத்து கிராமங்களிலிருந்தும் ஆதிவாசிகள் திரண்டு வந்து கூடுகிறார்கள். பலர் 50 மைல்கள் தூரம் வரை நடந்து வந்து சேர்ந்தார்கள். இப்படி கூடியவர்கள் 30,000 பேர்.

இதே நேரத்தில், நிலப்பிரபுக்களை தாக்குவதற்கு ஆயுதங்களுடன் ஆதிவாசிகளை செங்கொடி இயக்கம் திரட்டி வைத்திருக்கிறது என்று காவல்துறைக்கு நிலப்பிரபுக்கள் தகவல் கொடுக்கிறார்கள். மக்கள் கூடியிருந்த இடத்திற்கு காவல்துறை அக்டோபர் - 10ந் தேதி நள்ளிரவு வந்து சேர்ந்தது. வாகனத்தில் இருந்தபடியே மக்கள் மீது சுட்டார்கள். 15 மணி நேரம் காவல்துறையினர் இடைவெளிவிட்டு, இடைவெளிவிட்டு சுடுகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 வொர்லிகள் கொல்லப்பட்டு விட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் 12 வயது சிறுவனும் உண்டு. ஆனால், கூட்டம் கலையாமல் செங்கொடியை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்கிறார்கள். ஆதிவாசிகளின் வீரத்திற்கும், தைரியத்திற்கும், செங்கொடியின் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்திற்குமான எடுத்துக்காட்டு இந்த காட்சிகள். துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்த போதும் அவர்களின் உறுதியைக் குலைக்க முடியவில்லை. இறுதியாக, விவசாயிகள் சங்கத் தோழர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தோழர் கோதாவரி பத்திரமாக இருக்கிறார்;

இது நிலப்பிரபுக்கள் பரப்பிவிட்ட வதந்தி. கலைந்து செல்லுங்கள் என்று சொன்னபிறகு தான் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் உடல்களை தூக்கிக் கொண்டு தங்கள் கிராமங்களுக்கு சென்றார்கள்.  இந்த வீரத்தின் தொடர்ச்சி தான் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 36 வயதே நிரம்பிய இளம்தோழன் சுபாஷ் முண்டா, நிலக்கொள்ளை கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தையும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்திலும் எண்ணற்ற தோழர்களின் உயிர்கள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக குண்டர்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றுபட்ட பீகார் மாநிலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காடுகளின் மீதான தங்களின் உரிமையைப் பாதுகாத்து கொள்வதற்காக பிர்சா முண்டா நடத்திய யுத்தம், மேற்கு வங்க மாநிலத்தில் சந்தால் எழுச்சி, தமிழ்நாட்டில், வன்கொடுமைக்கு ஆளான வாச்சாத்தி பழங்குடி மக்களுக்கு நீதிகேட்டு 19 ஆண்டுகள் நடத்தப்பட்ட போராட்டம் மற்றொரு ஈடுஇணையற்ற வரலாறாகும். மேற்கண்ட வீரவரலாற்றின் தொடர்ச்சி தான் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு! -பெ.சண்முகம்