புதுதில்லி, மே 1- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் எழுந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தில்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் பதறிய ஒன்றிய பாஜக அரசு இந்திய முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது மேரிகோம் அறிக்கை தாக்கல் செய்த பின்பும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த வாரம் மீண்டும் தில்லியில் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பிரிஜ் பூஷன் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதியப்பட வேண்டும் என்று கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், வெள்ளியன்று தில்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த போதிலும், பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து விலகவேண்டும். அவரை சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்காக தொடக்கம் முதலே போராட்டக்களத்தில் உள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவின் கருத்து சமூக வலைத்தளங்கள் மூலம் வைர லாகி, போராட்டம் அடுத்த கட்டநகர்வை நோக்கி பயணித்து வருகிறது. போராட்டக் களத்தில் பஜ்ரங் புனியா கூறிய தாவது,”நாங்களும் எங்கள் இயல்புக்கு திரும்ப வருகிறோம். எங்களுக்கு விளையாடுவதும், விளையாட்டு சார்ந்த பயிற்சி எடுப்பதும் மிகவும் அவசியம். அதை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு நீதி கிடைத்தால் அது ஆசிய விளையாட்டில் வெல்லும் பதக்கத்தை விடவும் பெரிது” எனக் கூறினார். நடப்பு மாதத்தில் (மே மாதம்) ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மல்யுத்த பயிற்சி திட்டம் தொடங்க உள்ளதால் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கோரி சமூக வலைத்தளங்களிலும் ஒலிக்கும் குரல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
திமுக ஆதரவு
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக தரப்பிலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,”இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது. அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுகை அப்துல்லா திங்க ளன்று திமுக சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.