states

ஓய்வூதியதாரர்களிடம் ஆயுள் சான்றை நேரடியாக வாங்கிடுக!

தருமபுரி,ஏப்.27- ஓய்வூதியதாரர்களிடம் ஆயுள் சான்று பெறுவதை தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும் வாங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.  கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர்  கே.பி.பெருமாள் தலைமையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்றது. சம்மேளன மாநிலப் பொதுச்செயலாளர் டி.குமார், சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி. குமார், சிறப்பு தலைவர்  ஆர். .சிங்காரவேலு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஓய்வூதியதாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை நலவாரியங்களில் ஆயுள் சான்று கொடுக்கும் முறை இதுவரை நேரடியாக இருந்து வந்தது. இந்த ஆண்டு வாரிய கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என வாரியம் தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து வருகிறது. திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயுள் சான்று மனுக்கள் தொழிலாளர் அலுவலகங்களில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. ஆனால் சில மாவட்டங்களில் இப்பணியை செய்வதற்கு கட்டுமான வாரிய தலைவரும், செயலாளரும் சொல்லியும் மறுத்து வருகிறார்கள். இப்பணியை அனைத்து மாவட்ட நலவாரிய அலுவலகத்திலும் நேரடியாக ஆயுள் சான்று மனுக்களை பெறுவதற்கு தமிழக அரசு தலையீடு செய்து தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும். நலவாரியம் மூலம் தமிழக அரசு வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட நலவாரிய அலுவலகங்களிலும் கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பாக நேரடியாக பெறப்பட்ட இயற்கை மரணம், விபத்து மரணம், திருமண உதவி/ மகப்பேறு உதவி, கல்வி உதவி உள்ளிட்ட மனுக்களை விரைந்து பரிசீலித்து அதற்கான பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். மாநில முதலமைச்சருக்கு தமிழகம் முழுவதும் கட்டுமான சங்க கிளைகள் கோரிக்கை மனுக்களை அனுப்பிக்கொண்டுள்ளன. எனவே எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே அறிவித்து அமலாக்க கேட்டுக்கொள்கிறோம்.

காப்பீட்டுக்கு சட்டமியற்றுக!

பத்து லட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு கட்டிடம் கட்டும் உரிமையாளர்கள் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடும், 10 லட்ச ரூபாய் விபத்து காப்பீடும் உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தும் கட்டிடங்களுக்கு மட்டுமே அப்ரூவல் வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.   மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் அனைத்து மாவட்ட கண்காணிப்புக்குழுவை அமைத்து கூட்டங்களையும் உடனடியாக கூட்டுவதற்கு மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.