states

img

விளையாட்டு மைதானம், பூங்காக்களை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சி

சென்னை, அக். 29 - சென்னை மாநகராட்சியில் 595 பூங்கா, 9 கால்பந்து மைதானம், 2 அரங்குகளை தனியார்மயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு மாநகராட்சி கூட்டத்திலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி மாளிகை வளாகத்தில் கால்பந்து விளையாடியும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கால்பந்து பயிற்சி பெறுவோர் இணைந்து, சைதாப்பேட்டை அம்மா பூங்கா மைதானம் வாயிலில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாமன்றக் கூட்டம்

சென்னையில் பூங்காக்களுடன் இணைந்தும், தனியாகவும், விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இவற்றில் உள்ள டென்னிஸ் திடல், ஷெட்டில் பேட்மிண்டன் திடல்களை மாநகராட்சி தனியாருக்கு கொடுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாயன்று (அக்.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்கும் கட்டணம் நிர்ணயித்து, தனியார் வாயிலாக பராமரிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மணிக்கு ரூ. 120 கட்டணம் மக்கள் இலவசமாக பயன்படுத்தி வந்த மைதா னங்களுக்கு இனி நபர் ஒருவர் மணிக்கு 120 ரூபாய் செலுத்த வேண்டும். இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடினால் 1200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறாக 9 மைதானங்களில் இருந்து ஆண்டுக்கு 2 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தனியார் கட்டணமாக வசூலித்து, மாநகராட்சிக்கு 40 விழுக்காடு (93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்) தொகையை தர வேண்டும்.

595 பூங்காக்கள் தனியார்மயம்

மேலும், மாநகராட்சியில் உள்ள 871 பூங்காக் களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் 55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அரங்கம் தனியார்மயம்

மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை 3.40 லட்சம் ரூபாயிலிருந்து 5.43 லட்சம் ரூபாயாகவும், தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை 20 ஆயிரத்து 650 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் (18 விழுக்காடு ஜிஎஸ்டி தனி) உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 2.22 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

முன்னதாக மாமன்றக் கூட்டத் தின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பா. விமலா, சென்னை மாநகராட்சியின் இந்த தனியார்மய முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “விளையாட்டுத் துறை என்பது பணம் படைத்தவர்களின் கையில் உள்ளது. கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற உடல் திறன் சார்ந்த விளையாட்டுகளில் குடிசைப் பகுதி, தலித் மக்கள் ஈடுபடுகின்றனர். இவர்களே, தேசிய அளவில் பல சாதனைகளையும் புரிகின்றனர். கால்பந்தாட்ட இந்திய அணியில் முன்கள வீரராக நந்தகுமார் விளையாடுகிறார். இவர் ஒரு ஆட்டோ தொழிலாளியின் மகன். மாநகராட்சி தற்போது தனியாருக்கு விடவுள்ள முல்லை நகர் மைதானத்தில் கட்டணமின்றி பயிற்சி பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நபர் ஒருவருக்கு மணிக்கு ரூ. 120 கட்டணம் நிர்ணயித்தால், பணம் உள்ள வர்கள் மட்டுமே விளையாட முடியும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் ஒருவர் பயிற்சி செய்தால் மாதம் 7500 ரூபாய் செலவிட வேண்டும். இந்த விளையாட்டுகளிலிருந்து தலித்  மற்றும் குடிசை வாழ் இளைஞர்கள் வெளி யேற்றப்படுவார்கள். எனவே, தனியார்மயத்தை கைவிட வேண்டும்” என்றார். “தனியாருக்கு கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 93 லட்சம் மட்டுமே மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இது மாநகராட்சிக்கு பெரிய  தொகை அல்ல. வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு பகுதி தொகையை பெறலாம். விளையாட்டு துறையிலிருந்து துணை முத லமைச்சரிடம் பேசி, தொகையைப் பெற முடியும். ஒருசில தினங்களுக்கு முன்பு நேரு விளையாட்டு அரங்கில் பேசிய முதலமைச்சர், “இந்த அரசு விளையாட்டை வெறும் பொழுது போக்காக பார்க்கவில்லை. அது மனம், உடல் வலிமை சார்ந்ததாக பார்க்கிறது” என்றார். இந்த புரிதல் சென்னை மாநகராட்சிக்கும் வேண்டும். விளையாட்டுக்கு செலவிடுவதை செலவினமாக அல்லாமல் நாளைய தலைமுறைக்கு செய்யும் முதலீடாக பார்க்க வேண்டும். எனவே, தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

சிபிஐ, விசிக ஆதரவு

அப்போது பேசிய ஆணையர் குமரகுருபரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக பயிற்சி பெறுவோருக்கு கட்டணத்தை ரத்து செய்யலாம் என்றார். துணைமேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, பராமரிப்பு பணிகளுக்காகத்தான் தனியாரிடம் கொடுக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க பரிசீலிக்கலாம் என்றார்.  இதனை ஏற்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, விசிக உறுப்பினர்கள் எழுந்து நின்று, கட்டணமின்றி மைதானம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். விநோத விளக்கம் அதற்கு பதிலளித்த மேயர் ஆர். பிரியா, கோடிக்கணக்கில் செலவிட்டு மைதானங்களை அமைக்கிறோம். அவற்றை சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க குறைவான கட்டணம்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைதானம் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைக்க பரிசீலிக்கலாம் என்று விநோத விளக்கம் அளித்தார். அதன்பிறகு 79 தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

நூதன போராட்டம்

இதனைக் கண்டித்து ரிப்பன் மாளிகை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பா. விமலா, எம். சரஸ்வதி, ஆ. பிரியதர்ஷினி, சிபிஐ உறுப்பினர் ரேணுகா ஆகி யோர் கால்பந்து விளையாடி நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். வாலிபர் சங்கம் எதிர்ப்பு மாநகராட்சியின் தனியார்மயத்தை கண்டித்து, சைதாப்பேட்டை அம்மா பூங்கா மைதானம் வாயிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கால்பந்து பயிற்சி பெறுவோர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய விளையாட்டு வீரர்கள், “இவ்வளவு கட்டணம் செலுத்தி யாரும் விளை யாட முடியாது. இந்த பூங்காவை, எதுக்கு தனி யாரிடம் கொடுக்கணும்? மக்களிடம் இருந்து சிறுகச் சிறுக வசூலிக்கப்பட்ட வரியில் விளை யாட்டுத் திடல் கட்டப்பட்டது. இதை தனியாருக்கு கொடுக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?  கட்டணம் நிர்ணயித்து, அதை தனியார் வசூலித்து, அதிலிருந்து பங்கு வாங்கி மாநகராட்சி யை நடத்த வேண்டிய அவசியமா உள்ளது? எனவே, பூங்காவை தனியாருக்கு கொடுக்க விடமாட்டோம்” என்றார்.

விளையாட்டு வீரர்களின் கனவை விற்றுக் காசாக்க வேண்டாம்!
சென்னை மாநகராட்சிக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் முடிவுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:  சென்னை மாநகராட்சியின் அரங்கத்துறை, தனக்குச் சொந்தமான கால்பந்து செயற்கை புல் திடல்களை பராமரித்து வருகிறது. இப்பராமரிப்பால் ஏற்படும் நிதிச்சுமையைக் குறைக்க, நிலையான வருவாய்ப் பகிர்வு அடிப்படையில் இணையதள மின்னணு ஏல முறையில் தனியாருக்கு வழங்கவும், சந்தை விலை அடிப்படையில் பயனர் கட்டணம் நிர்ணயிக்கவும் மாநகர் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.  ஏற்கெனவே கடந்த 2023 ஜூலை 28-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாநகராட்சியின் டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஷட்டில், பேட்மிண்டன், ஸ்கேட்டிங் திடல்கள் தனியார் பராமரிப்புக்கு மாற்றப்பட்டன. இப்போது கால்பந்து திடல்களும் தனியார்மயமாக்கப்பட உள்ளன.  புதிய திட்டத்தின்படி, ஒருவர் ஒரு மணி நேரம் விளையாட 120 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு அணியில் அதிகபட்சம் 5 பேர் வீதம் இரு அணிகள் விளையாட ஒரு மணி நேரத்துக்கு 1,200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு நாளில் 6 மணி நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு 93 லட்சத்து 31 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த முடிவு சென்னை நகரின் ஏழை-எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுக் கனவைச் சிதைக்கும். ஏற்கெனவே போதுமான விளையாட்டுத் திடல்கள் இல்லாத நிலையில், பெரும்பாலான இளைஞர்கள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ள சூழலில், இந்த முடிவு பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே விளையாட்டை அனுமதிக்கும். இது ஏழை-எளிய இளைஞர்களின் விளையாட்டு உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிக்கும் நிலையில், இம்முடிவு உண்மையான திறமைகளைப் புறந்தள்ளும். போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க விளையாட்டு சிறந்த கருவியாக இருக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடும்.  எனவே, தமிழக அரசும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை யும் உடனடியாகத் தலையிட்டு, மாநகராட்சியின் விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும்.   இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.