அமராவதி, ஜூலை 5 - ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் அல்லூரி சீதாராம ராஜூ சிலை திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று கலந்து கொண்டார். இதையொட்டி ஆந்திரா வந்த பிரதமர் மோடிக்கு, அவர் சென்ற வழித்தடங்கள் முழுவதும் ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கங்களை எழுப்பி போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ‘கோ பேக் மோடி’ என்ற வாசகங்களு டன் கூடிய கறுப்புப் பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன. நரேந்திர மோடி 2014 தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? என்ற கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர். ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜாநாத், செயல் தலைவர் ஷேக் மஸ்தான் உட்பட பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர். மேலும், நிகழ்ச்சி முடிந்து, கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டபோதும் அவரது ஹெலிகாப்டர் அருகே கறுப்புப் பலூன்களை பறக்க விட்டு காங்கிரஸ்காரர்கள் நான்கு பேர் கைதாகியுள்ளனர். பிரதமரின் ஹெலிகாப்டர் அருகே பலூன்களை பறக்கவிட்டது, பிரதமரின் பாதுகாப்பை மீறிய செயலாக பார்க்கப்படு கிறது. பாதுகாப்பு வளையத்தையும் கடந்து பிரதமரின் அருகில் உள்ள வளாகத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி நுழைந்த னர் என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு சென்ற 5 நிமிடங்களுக்கு பின்னரே பலூன்கள் பறக்க விடப்பட்டன என்பதால் பாதுகாப்பு விதிமீறல்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.