சென்னை மாநகரின் மிக முக்கியமான கலாச்சார அடையாளங்களில் ஒன்று கலாசேத்ரா ஃபவுண்டேஷன். இங்கு, பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு கலைகளில் நான்காண்டு கல்வியை முடிப்பவர்களுக்கு பட்டயச் சான்று வழங்கப்படுகிறது. இது தவிர தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சிறப்பு பாடங்களும் நடத்தப்படுகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாணவர்களுக்கு அளித்த பாலியல் தொல்லை சட்டமன்றம் வரை எதிரொலித்துள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கலாசேத்ரா கல்வி அறக்கட்டளை நிறுவனம் 1936 ஆம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர், 1962 ஆம் ஆண்டு திருவான்மியூருக்கு மாறியது. அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அரசு, இதனை தன்னாட்சி அமைப்பாக அறிவித்தது. மேலும், 1993 ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. ஒரே ஒரு மாணவருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்றைக்கு பல நூறு மாணவர்கள் பயில்கின்றனர். அதுவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து தங்கி உள்ளனர். இந்த கல்வி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அன்றைய காலகட்டத்திலேயே அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட பலரும் உறுதுணையாக இருந்துள்ளனர். கலாசேத்ரா அறக்கட்டளையும் அதன் நிறுவனர்களான ருக்மணி தேவி அருண்டே, அவரது கணவரும் தத்துவவியலாளருமான ஜார்ஜ் இருவரும் இந்தக் கல்வி நிறுவனத்தில் காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இசைக் கலைஞர்களை பலரையும் கவுரவித்துள்ளனர். ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ருக்மணி தேவி கவின் கலை கல்லூரியாக செயல்பட்டு வரும் இங்கு பரதநாட்டியம் மற்றும் இசையை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாத சம்பளம் குறைந்தது ரூ.35,000, அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கும் வழங்கப்படுகிறது. இத்தகைய பெருமைமிகு கல்லூரியில் சில ஆசிரியர்கள் பாலியல் வன்மத்துடன் நடந்து கொள்கிறார்கள். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களது தொல்லையில் இருந்து விடுபட முடியவில்லை. அதிலும் குறிப்பாக, நான்கு ஆசிரியர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகின்றனர். இது தொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிற மாணவிகளின் ஆதங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, சமூக ஊடகங்களில் வைரலானது. அனிதா ரத்னம் போன்ற பிரபல நடனக் கலைஞர்களும் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் இதனை சுட்டிக்காட்டினர். இதனையடுத்து, தேசிய பெண்கள் ஆணையமும் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தது. நோட்டீசும் அனுப்பியது. இந்த புகார்கள் அடிப்படையற்றவை என்று அந்தப் புகார்களைப் புறம்தள்ளி வந்த கலாசேத்ரா அமைப்பு, ஒன்றிய அரசின் மூலம் அவசர அவசரமாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய கலாச்சார அமைச்சகத்திற்கும் தெரிவித்துள்ளோம்” என்று திசைதிருப்பும் முயற்சியில் இறங்கியது.
இந்த பின்னணியில்தான், மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அங்கு வந்த செய்தியாளர்களுக்கு முதலில் அனுமதி மறுத்த கலாசேத்ரா நிர்வாகம், பிறகு அவர்களை உள்ளே அனுமதித்தது. மறுபுறத்தில், ஏப்ரல் 6ஆம் தேதி வரை கல்லூரி மூடப்படுவதாகவும் அறிவித்தது. விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை விடுதியைக் காலி செய்ய வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்தது. இந்த விடுமுறை அறிவிப்பு, தங்களது போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாகப் பார்த்த மாணவிகள் இரவு நேரத்திலும் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில்தான், இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. விழுப்புரம் இஸ்லாமியர் படுகொலை, அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விவகாரங்களை கையில் எடுத்த பிரதான எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியும், தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் என்றும் உடனே அந்த பள்ளியின் நிர்வாகிகளை கைது செய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் என்று போராடிய அண்ணாமலையின் பாஜக எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ‘வாய் மூடி மவுனிகளாக’ மாறினர். இதற்கு காரணம், வருகிற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடரும் என்ற அறிவிப்பாகும்.