தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
சென்னை,ஜன.13- தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜன.9 அன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு வருத்தம் தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஆளும் கட்சி உறுப்பினர் ந. ராம கிருஷ்ணன் முன்மொழிந்த தீர்மானத் தின் மீது இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வெள்ளியன்று (ஜன.13) முதலமைச்சர் பதில் அளித்து பேசினார். இந்த கூட்டத்தொடரில் மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தமிழ்நாட்டின் கனவுத் திட்ட மான சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஓசூரில் நவீன தொழில்நுட்பத்துடன் வர்த்தக மையம்
சென்னை,ஜன.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் அசோக், “கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் இடையே வர்த்த மையம் அமைக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓசூர் ஒரு மிகப்பெரிய அளவிலேயே வளர்ந்து வரக்கூடிய தொழில் நகர மாக உருவெடுத்திருக்கிறது. தமிழ் நாட்டிலேயே இந்த அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களை எடுத்துப்பார்க்கும் பொழுது, ஓசூர் அளவிற்கு வேறு எந்த நகரங்களும் வர முடியாத அளவிற்கு உலகளாவிய வகை யில் முக்கிய நகரமாக மாறி வருகிறது. ஓசூருடைய அமைப்பு, அதனு டைய தொழில் சூழல், அதனுடைய புவியியல் அமைப்பு, அருகே இருக்கக் கூடிய பெங்களூர் போன்ற நகரங்க ளுடைய தொடர்பு, தொழில்நுட்ப வசதி கள், இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஓசூர் மிக சிறந்த அளவிலே ஒரு தொழில் நகரமாக உருவாக்கு வதற்கு, மென்மேலும் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்யும். சட்டப்பேரவை உறுப்பினர்கள் இங்க சுட்டிக்காட்டியதை போல, ஓசூ ரில் அமையக்கூடிய வர்த்தக மையம் எல்லா விதமான வசதிகளையும் உள்ள டக்கியதாக இருக்கும். இப்போது இருக்கக்கூடிய நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கி இருக்கக்கூடிய தாக வர்த்தக மையத்தை அமைப்ப தற்கு அரசு எல்லா வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.
வீரமாமுனிவருக்கு மணி மண்டபம்
சென்னை,ஜன.13- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ,“ கோவில் பட்டி தொகுதியில் வீரமாமுனிவருக்கு மணி மண்டபம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்றார். இதற்கு பதிலளித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “தூத்துக்குடி மாவட்டம், காமநாயக் கன்பட்டி கிராமத்தில் வீரமாமுனி வருக்கு திருவுருச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி 40 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளது. மீத முள்ள பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படும்”என்றார்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னை,ஜன. 13- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில்நடத்த உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது நடை பெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சி நம் கண்ணுக்கு முன்னால் நன்கு தெரி கிறது. புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 15 மாத காலத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. இதுவரை 207 தொழில் நிறுவனங் கள் புதிதாகத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 209 கோடிக்கு முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளதுடன், 3 லட்சத்து 44 ஆயி ரத்து 150 நபர்களுக்கு நேரடியாக வும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க இங்கே வருகிறார்கள். அந்த வகையில் தொழில் உரிமை யாளர்களை - நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு. அண்மையில் “ஸ்டார்ட் அப் இந்தியா” வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல் பாடுகளுக்காக ‘லீடர்’ என்கிற அங்கீகாரத்தினை பெற்றுள்ளது தமிழ்நாடு. தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி யின் முகமாகவும் முகவரியாகவும் இருக்கிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பல்வேறு திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளதாகவும் முதல்வர் தெரி வித்தார்.
எனது சக்தியை மீறியும் செயல்படுவேன்: ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை !
சென்னை,ஜன.13- ஆளுநர் இந்த மாமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதியன்று 2023-2024 ஆம் ஆண்டின் தொடக்கத் துக்கான தொடக்கவுரை யாற்றினார். அன்றையதினம் நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி அரசியலாக்க நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்க வும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழு மியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன். தமிழ்காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் நாளாக, அன்றைய தினம் அமைந்திருந்ததே தவிர வேறல்ல. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் இம்மாமன்றத்துக்கு வருகை தந்து உரையாற்றிய ஆளுநருக்கு இந்த அரசின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது பதிலுரையில் தெரிவித்தார்.
இஸ்ரேலில் வறுமை அதிகரிப்பு
டெல் அவிவ், ஜன.13- இஸ்ரேல் குடும்பங்களில் காணப்படும் வறுமை கடந்த சில ஆண்டுகளில் அதி கரித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப் பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 2021-ஆம் ஆண்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடாக அதிகரித்திருந்தது. மேலும் நான்கில் ஒரு குடும்பத்தினரால் தங்கள் மாதாந்திரச் செலவை சமாளிக்க முடியாமல் திணறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 96 லட்சம் மக்களில் சுமார் 20 லட்சம் பேர் கடுமையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். அரசு நிறுவனமான காப்பீட்டு மையம் வெளியிட்டுள்ள இந்தப் புள்ளிவிபரம்தான் வறுமை மற்றும் பட்டினி குறித்துக் கடைசி யாக வெளிவந்ததாகும். 2021-ஆம் ஆண்டு விபரத்தைத்தான் இந்த அறிக்கை யும் தந்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் மக்கள் கூடுதலான நெருக்கடியைச் சந்தித்திருப்பார்கள் என்று இந்த அறிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். மருத்துவச் சிகிச்சையைத் தள்ளிப் போடும் நிலைமைக்குக் குடும்பங்கள் சென்றுள்ளன. கிட்டத்தட்ட 9 லட்சம் குடும்பங்கள் மருத்துவ சிகிச்சையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதியிருக்கின்றன. சுமார் 7 லட்சம் குடும்பங்கள் மருத்துவர்களால் பரிந்து ரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கா மலேயே சென்றிருக்கின்றன. வறுமையின் பிடியில் சிக்கும் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று புள்ளிவிபரங்களை வெளியிட்ட மையத்தின் இயக்குநர் யரோனா ஷலோம் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலக் கல்வியமைச்சர் சந்திரசேகர் நாளந்தா பல்கலை.யில் பேச்சு மனுஸ்மிருதி, ராமாயணம் போன்றவை ஆதிகுடிகளுக்கு எதிரானது!
பாட்னா, ஜன. 13 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரானவை என்று பீகார் கல்வி யமைச்சர் சந்திரசேகர் பேசியுள்ளார். மேலும், இவை மக்களிடையே வெறுப்பை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பீகார் கல்வி அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சந்திர சேகர், நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு மாணவர் களிடையே உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். ‘‘ராமாயண காவியத்தை அடிப் படையாகக் கொண்ட துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் கவிதை சமூ கத்தில் வெறுப்பைப் பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. தலித்துக்கள், கல்வியைப் பெற்ற பின் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்று ராம்சரித்மனாஸ் கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ் மிருதி’ ஆகியவை சமூகத்தை பிளவு படுத்துகின்றன. அதனாலேயே தலித், பழங்குடிகள் மத்தியில் ராம்சரித் மனாஸுக்கு எதிர்ப்பு எழுந்தது. காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து’ வெறுப்பைப் பரப்பும் நூலாகும். அதற்கு முன்பு, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகி யவை நாட்டில் வெறுப்பைப் பரப்பின. ஆனால், வெறுப்பு அல்ல, அன்புதான் நாட்டை ஒன்றிணைக்கிறது. இந்துக் களின் மரியாதைக்குரிய நூல் களான, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் போன்றவை தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கல்வி கற்கும் பெண்களுக்கு எதி ரானவை. எனவே, ராம்சரித்மனாஸில் சமூகப் பாகுபாடுகளை அங்கீகரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள வாசகங் கள் நீக்கப்பட வேண்டும்” என சந்திர சேகர் கூறியுள்ளார்.