மதுரை, ஜுன் 1- தற்காலிகப் பணிக்கான தகுதிகளில் இந்தி அவசியம் என்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பை, சு.வெங்கடேசன் எம்.பி.யின் தலையீட்டைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி மையத்தில் திட்ட உதவியாளர் என்ற தற்காலிகப் பணிக்கான அறிவிப்பு மே 29 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான தகுதிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தொடர்புத் திறன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல தரப்பினரிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறையீடுகளைத் தொடர்ந்து இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் தலையீடு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் ஒரு தற்காலிக பணிக்கான தகுதி என்ற அறிவிப்பின் மூலமாக இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவதை கைவிட வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து உடனடியாக அந்தத் தகுதி நிபந்தனை நீக்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி யுள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி., உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையீடு செய்து உடனடியாக நிபந்தனை நீக்கப்பட்ட புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.