states

ஓபிஎஸ்-ஐ கைகழுவும் அதிமுகவினர்

தேனி, ஜூலை 9- ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.கவில் தேனி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையது கான் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான எஸ்.டி.கே ஜக்கையன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறார்கள். இரண்டு அணியினரும் தனித்தனியாக கூட்டம் நடத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான தேனி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரும் அண்ணா தொழிற்சங்க செயலாளருமான ஆர்.பார்த்திபன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலச்சந்தர், தனலட்சுமி சொக்கலிங்கம், பேரவை இணைச் செயலாளர் கரிகாலன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் நாராயணன், தேனி ஒன்றிய துணைச் செயலாளர் தயாளன் ஆகிய பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். சொந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் அணி மாறி இருப்பது ஓபிஎஸ்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .