states

7,500 ஸ்மார்ட் வகுப்பறைகள்

சென்னை, ஏப்.11- தமிழ்நாட்டில் வருகிற கல்வியாண்டில் ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள்(ஸ்மார்ட் வகுப்புகள்) தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று(ஏப்.11)  நடந்த பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.  பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2022-23ஆம் கல்வியாண்டு தொடங்கி நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் ஏற்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக நடப்பாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.150 கோடியில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்” என்றார். 2713 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.210 கோடியில் அமைக்கப்படும்.  இதனால் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர் என்றும் அமைச்சர் கூறினார்.

அவுட்சோர்சிங்

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகளைத் தூய்மை செய்தல், இரவுக்காவல் பணியினை மேற்கொள்ளல் போன்ற சேவைகள் வெளிப்பணியமர்த்துதல் (அவுட்சோர்சிங்) செயல்படுத்தப்படும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இத்திட்டம் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் ரூ.30 கோடியில் அமைக்கப்படும், 1000 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அனைத்துத் தேவைகளையும் வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.90 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். பாரம்பரிய கட்டடங்களைப் புதுப்பித்தல், நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள், பள்ளிகளில் காய்கறித் தோட்டம், பள்ளி சதுரங்க ஒலிம்பியாட், கணினித் தேர்வு மையங்கள், நூலகங்களில் வை பை வசதி, வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் உள்ளிட்ட 34 அறிவிப்புகளையும் வெளியிட்டார்.