states

img

ஆதிவாசிகள் உரிமைகளுக்கான 4ஆவது அகில இந்திய மாநாடு - பி.டில்லி பாபு

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4 ஆவது அகில இந்திய மாநாடு செப்டம்பர் மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.  இம்மாநாட்டை எழுச்சிகரமாக நடத்திட வரவேற்புக்குழு தீவிரமான பணிகளை முன்னெடுத்து வருகிறது.  மாநாட்டின் செய்திகளை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்லும் வகையில், கடந்த ஒரு மாத காலமாக சுவர் எழுத்து பணிகள் துவங்கி முடிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாட்டின் செய்தியை தாங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் அச்சடிக்கப்பட்டு, ஒட்டுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநாட்டை வெற்றிபெற வைப்பதற்கான அனைத்து பணிகளும் சுறுசுறுப்பாக மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த மாநாட்டின் நிதிக்குழு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இன்றுவரை நிதி சேகரிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆதிவாசிகள் அகில இந்திய மாநாட்டில், 17 மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கெடுக்க உள்ளனர். இவர்களுக்கு, தமிழகத்திற்கே உரித்தான வகையில், உணவு உள்ளிட்ட சிறப்பான உபசரிப்பை மேற்கொள்ள வரவேற்புக்குழு தயாராகி வருகிறது. இதற்கான மளிகை உள்ளிட்ட பொருட்கள் சேகரிப்பது என அத்தனை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் நாமக்கல் மாவட்டத்திற்கு செப்டம்பர்  18-ஆம் தேதியே அனைத்து பிரதிநிதிகளும் வருவார்கள் என்பதால் அதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.  நாமக்கல் கொங்கு மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாட்டு அரங்கமும், (ஏறக்குறைய 450 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்டது) பிரதிநிதிகள் தங்குவதற்கான மண்டபங்களும் தயாராக உள்ளன.  மாநாடு செப்டம்பர் 19 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. முன்னதாக, தியாகிகளுடைய நினைவு ஜோதிகள் பெறுகின்ற வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. மாநாட்டை கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ராஜு துவக்கி வைத்து உரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து, ஸ்தாபன, வேலை அறிக்கை, அரசியல் நிலை குறித்த அறிக்கையை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திரிபுரா மாநில முன்னாள் அமைச்சருமான ஜிதேந்திர சவுத்ரி முன்மொழிகிறார்.  செப்.21 மாலை பழங்குடி மக்களின் பண்பாட்டுப் பேரணி, கலாச்சாரம், நடனம், இசை நிகழ்ச்சியுடன் துவங்க உள்ளது. இம்மாநாட்டு பேரணியில், 20 ஆயிரம் பழங்குடி மக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை முழுதும் 5 ஆயிரம் பேரும், பிற மாவட்டங்களில் இருந்து ஒரு 15,000 பேரும் திரட்டுவது என்று திட்டமிடப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்ட மேடையில் கலை நிகழ்ச்சியும் புதிய பாடல் அரங்கேற்றமும் நடைபெற உள்ளது.

மாநாட்டு தீர்மானங்களை விளக்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு பெ.சண்முகம் தலைமை தாங்குகிறார். இதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜிதேந்திர சௌத்ரி, தோழர் பாபு ராவ், குளின் பாஸ்கி மற்றும்  திருப்பதி ராவ், பி.டில்லி பாபு, சரவணன், பொன்னுசாமி, தேவி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.  மாநாட்டுப் பணிகளை 150 பேர் கொண்ட வரவேற்புக் குழு மேற்கொண்டுள்ளது. இதில், உணவுக் குழு, விளம்பரக் குழு, மண்டபக் குழு என தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான பணிகளை முனைப்புடன் செய்து வருகிறார்கள்.  மாநாட்டை வெற்றிகரமாக்கிட, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் நிர்வாகியுமான பெ.சண்முகம், மாவட்டப் பொறுப்பாளர் செ.முத்துகண்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி,  மூத்த தோழர் ஏ.ரங்கசாமி மற்றும் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வரவேற்புக் குழுத் தோழர்கள் உற்சாகமாக மாநாட்டு ஏற்பாடுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிச்சயமாக இதுவரை நடந்த மூன்று மாநாடுகளை விட, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் 4ஆவது அகில இந்திய மாநாடு மிகச் சிறப்பாக அமையும். தமிழகத்தில் இருக்கக்கூடிய, குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்பின் தலைவர்களும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மாவட்டக் குழுக்களும் மிகச் சிறப்பான பணியை ஆற்றுகின்ற மாநாடாக இது நிச்சயம் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. ஆதிவாசிகளின் உரிமைகளுக்கான இந்த அகில இந்திய மாநாட்டிற்கு அனைவரையும் வரவேற்பதற்கு வரவேற்புக் குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.