2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு சராசரியைவிட 89 விழுக்காடு அதிகமாகும். வரும் ஆண்டில் ரூ.14,000 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக ரூ. 1,500 கோடி வழங்கப்படும்.
அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு
வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத் தன்மையடைந்து நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயி கள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். ஏரிகள், குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணில் மண்வளத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மாநில அரசு, அந்தந்த கிராமத்திலுள்ள விவசாயிகள், குளத்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் வயல்களில் பயன்படுத்துவதற்கு, சென்ற ஆண்டே அனுமதித்து 15 லட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு, 12,500 விவசாயிகள் பயனடைந்தனர். இதே போன்று, நடப்பாண்டிலும் நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம் தகுதியான ஏரிகள், குளங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வண்டல் மண்ணை, விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும். விவசாயிகள் அதிக எண்ணிக் கையில் பயன் பெறும் வகையில், காலதாமதமின்றி இப்பணியை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும்.