states

img

வயநாடு துயரம் பலி எண்ணிக்கை 246 ஆனது

மேப்பாடி, ஜூலை 31- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 246 பேர்  உயிரிழந்துள்ளனர். இவர்களில் 144 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

94 பேரின் உடல்கள் மேப்பாடி ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 20 பேர் இன்னும்  அடையாளம் காணப்படவில்லை. புதனன்று மட்டும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவரின் சடலமே அடையாளம் காண முடிந்தது.

சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட 72 பேரின் உடல்கள் நிலம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டன. இவற்றில் 43 சடலங்கள் மற்றும் 29 உருக்குலைந்த உடல்  உறுப்புகள் உள்ளன. இதுவரை நான்கு பேர் மட்டுமே  அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவை சூரல்மலையி லிருந்து சாலியாறு வழியாக போத்துக்கல் வரை ஆற்றில் வந்த சடலங்கள். புதனன்று மட்டும் சாலியாற்றில் இருந்து 11 பேரின் உடல்களும், 4 உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டன.  மேலும் சாலியாற்றின் கரையில் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உறவினர்களை அடையாளம் காண வசதியாக இறந்த உடல்கள் மேப்பாடி சிஎச்எஸ்சி-க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.  கூராய்வு செய்யப்பட்ட 34 உடல் உறுப்புகளும், 26 சடலங்களும் கொண்டு செல்ல தயாராக 28 ஆம்புலன்ஸ்களில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இறந்த உடல்கள் நாடுகாணிச்சுரம் வழியாக மேப்பாடிக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது ஐந்து முகாம்களில் (வயநாடு-98, மலப்புரம்-1) 99 பேர் உள்ளனர். மொத்தம் 195 பேர் மருத்துவ மனைகளுக்கு வந்துள்ளனர். இவர்களில் 190 பேர் வயநாட்டையும், 5 பேர் மலப்புரத்தையும் சேர்ந்தவர்கள். தற்போது வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 92 பேர் வயநாட்டைச் சேர்ந்தவர்கள். 

இந்நிலையில் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முஹம்மது ரியாஸ் தெரிவித்துள்ளார். 

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் களமிறங்கியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பலியானோர் உடல்களை தேடிக் கண்டுபிடித்து வருகின்றனர்.