ஜன. 11 - திருவனந்தபுரத்தில் ஜனவரி 6-9இல் நடைபெற்ற 13ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளின் தகுதி ஆய்வு அறிக்கை திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 80 வயது விஜய ஜானகிதான் மூத்த பிரதிநிதி. மணிப்பூரைச் சேர்ந்த 21 வயதான சாதிக்கி இளைய பிரதிநிதி. மாநாட்டில் 215 கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்கள் பங்கேற்றனர். பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 110 பேரும், பழங்குடியினத்தைச் சேர்ந்த 48 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 310 பேரும் மாநாட்டுப் பிரதிநிதிகள். முனைவர் பட்டம் பெற்றோர் 28 பேர். 141 முதுகலை பட்டதாரிகளும், 182 இளங்கலை பட்டதாரிகளும் ஆவர். 1981 இல் நடந்த முதல் மாநாட்டில் பங்கேற்ற 34 பிரதிநிதிகள் 13ஆவது மாநாட்டிலும் பங்கேற்றனர்.
மாதர் சங்கத்தின் அனைத்து அகில இந்திய மாநாடுகளிலும் பங்கேற்ற 20 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 374 பெண்கள் கைது செய்யப்பட்டவர்கள். 127 பேர் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஏ.ஆர்.ஆதிரா 42 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். மாநாட்டு பிரதிநிதிகளாக 7 எம்.எல்.ஏ.க்கள், 26 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஒரு அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். கேரளாவில் இருந்து பங்கேற்றவர்களில், கல்வி அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து, சட்டமன்ற உறுப்பினர் கே.கே. ஷைலஜா டீச்சர் ஆகியோர் இடம் பெற்றனர். பல்வேறு நிலைகளில் வன்முறை களை எதிர்கொண்ட பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக வந்திருந்தனர்.
காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 38 பேர், வகுப்புவாத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 53 பேர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 37 பேர், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 14 பேர், பணியிட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேர், அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 57 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அரியானாவைச் சேர்ந்த சவிதா (கன்வீனர்), ரீனா (மத்தியப் பிரதேசம்), பி.கே. ஜைனபா (கேரளா) ஆகியோரைக் கொண்ட தகுதி ஆய்வுக்குழு இந்தத் தகவலைத் தொகுத்தது.