கொச்சி, அக்.10- கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியத்துக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நட வடிக்கையை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் விசாரணையை தொடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் ரிசர்வ் வங்கியை ஒரு தரப்பாக நீதிமன்றம் மாற்றியது. இந்த வழக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அமலாக்கத்துறையின் நோட்டீஸ் குறித்து முன்னாள் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கும் கிஃப்பியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தாமஸ் ஐசக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அமலாக்க இயக்குநரகத்துக்கு உள்ளதாக நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. தாமஸ் ஐசக் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்றும் அவர் ஒரு சாட்சி என்றும் அப்போது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. அமலாக்க இயக்குநரகம் வெளியிட்ட நோட்டீஸ் தெளிவற்றது. தன்னிடம் கோரப்பட்ட ஆவணங்கள் தற்போது அமலாக்கத்துறை வசம் உள்ளது. நோட்டீஸ் தொடர்பான எந்த நட வடிக்கையும் தடை செய்யப்பட வேண்டும். அந்த நோட்டீஸில் கிஃப்பியோ தானோ என்ன குற்றம் செய்தோம் என்று கூறவில்லை. குற்றத்தை குறிப்பிடாத விசாரணை அமலாக்க இயக்குநரகத்தின் அதிகார வரம்பிற்கு புறம்பானது என்று தாமஸ் ஐசக் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.