கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 90க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இதுவரை இல்லாத பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இதுவரை 5,531 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வனத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் சென்றுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.