states

img

முதுகுழி காட்டில் அரிக்கொம்பன்; தொடர் கண்காணிப்புக்கு ஏற்பாடு

குமுளி/திருவனந்தபுரம், ஜுன் 7- தேனி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து பிடிபட்ட அரிக்கொம்பன் காட்டு யானை கன்னியாகுமரி மாவட்டம் முதுகுழி (அப்பர் கோதையார்) வனப்பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் மூலம் யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. கம்பம் வனப்பகுதியில் உள்ள சண்முகநதி அணையின் சின்ன ஓவலபுரம் பகுதியில்  திங்களன்று (ஜுன் 5) காலை அரிக்கொம்பன் பிடிபட்டது. தமிழகத்தின் வனவிலங்கு ஆம்புலன்ஸ் காலை 7 மணிக்கு யானையுடன் கம்பத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை வந்தடைந்தது. மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடியில் இருந்து, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக அப்பர் கோதையாறு அணையின் அடர்ந்த வனப் பகுதியான முதுகுழி காட்டுக்கு யானை கொண்டு செல்லப்பட்டது.

யானைக்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தும், போதிய வசதி இல்லாததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை வனப்பகுதியில் விடப்பட்டது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்கள் முகாமிட்டு கண்காணிக்கின்றனர். அரிக்கொம்பனைப் பிடிக்க கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானது. வனத்துறை மட்டும் 85 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. பணி வெற்றி பெற துணைநின்ற போக்குவரத்து துறை, காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை நலத்துறை ஆகிய துறைகளின் செலவுகள் என ஒரு கோடியைத் தாண்டும்.

திருவனந்தபுரத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வனப்பகுதியான அப்பர் கோதையாற்றில் இருந்து நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்திற்கு சுமார் 30 கி.மீ தூரம் உள்ளது. உயரமான மலைகள் மற்றும் ஏராளமான நீர்நிலைகளைக் கடந்து, ‘ஆனநிரத்தி’ எனப்படும் கேரள-தமிழ்நாடு வன எல்லைக்கு பயணித்தால் மட்டுமே அரிக்கொம்பன் பேப்பாறைத் தொடர் அல்லது நெய்யாறு மலைத்தொடரை அடைய முடியும். பேப்பாறை வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையான பாண்டிப் பத்து மற்றும் ஆனநிரத்தி வழியாக யானைகள் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் செல்கின்றன. அப்பர் கோதையாறு-கேரள எல்லையில் மக்கள் தொகை குறைவாக இருப்பது இரு மாநிலங்களுக்கும் ஆறுதல்.