அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 70 நிமிடங்களுக்குள் நடந்த இந்த தாக்குதலில் 56 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், குஜராத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைக்கு பழிதீர்க்கும் விதமாக தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கத்தினர் தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது. இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏ.ஆர்.படேல் 49 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குற்றவாளிக்கான தண்டனை குறித்து இன்று (பிப்.18) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.