அகமதாபாத், நவ.11- பாஜகவில் சேருவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப் போவ தாகக் கூறியுள்ளளார் ஆம்ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர். சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. பாஜகவின் வெற்றிக்கு ஆம் ஆத்மி தான் பின்புலமாக இருந்தது. பாஜக-156. காங்கிரஸ்- 17, ஆம் ஆத்மி- 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.,வை சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராக திங்களன்று மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இந்த நிலையில், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள விஸ்வதர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் பூபத் பயானி கூறுகையில், “ நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேரலாமா வேண்டாமா என்று மக்களிடம் கேட்பேன். குஜராத் மக்கள் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் வெற்றியை கொடுத்துள்ளனர். அதை நான் மதிக்கிறேன். நான் முன்பு பாஜக-வில் இருந்தேன். அதன் தலைவர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தேன். பின்னர் ஆம் ஆத்மியில் சேர்ந்தேன்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “எனது தொகுதி விவசாயிகள் ஆதிக்கம் உள்ள பகுதி. அவர்களின் நீர்ப்பாசனம் தொடர்பான பிரச்சினைகளை நான் தீர்க்க வேண்டும். அப்பகுதியில் வர்த்தகர்களின் கோரிக்கைகளையும் கவனிக்க வேண்டும். என்னால் அரசாங்கத்துடன் எனக்கு நல்ல தொடர்பு இல்லையென்றால் எனது கோரிக்கைகளுக்கு எப்படி அரசாங்கத்திடமிருந்து நேர்மறையான பதில் கிடைக்கும்” என்றார்.