கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். கர்நாடகாவின் பல பகுதிகளுக்கும் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க கோரி இந்துத்துவா அமைப்புகள் காவித்துண்டை அணிந்து ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டம் நடந்த இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் பெங்களூரு நகரில் உள்ள பள்ளி கல்லூரிகள் வாயிலிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்கு கூட்டம் கூட தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தொடரப்பட்ட வழக்கில் நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது. இன்று இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.