ஹிஜாப் விவகாரத்தில் பெண்ணின் அடிப்படை உரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் தவறியது கேலிக்கூத்து என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் வாத பிரதிவாதங்களை தொடர்ந்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் தீர்ப்பில் "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே.
அது பேச்சு உரிமை, தனிநபர் உரிமை என அரசியல் சாசன உரிமைகள் எதையும் பறிப்பதாகாது. பிப்ரவரி 5, 2002ல் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். உடுப்பி அரசு பியு கல்லூரி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முகாந்திரம் இல்லை" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹிஜாப் என்பது ஆடை பற்றியது அல்ல. அது ஒரு பெண் எந்த ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை பற்றியது. இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்ட தவறியது கேலிக்கூத்து என்று அவர் விமர்சித்துள்ளார்.