பெல்லாரி, பிப். 2 - கர்நாடக அரசு நடத்திய இசை நிகழ்ச்சியில் இந்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேடை மீது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2023 ஜனவரி 27 முதல் 29 வரை கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் ‘ஹம்பி உத்சவம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்று பாடல்களை பாடியுள்ளார். பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான பாடகர் கைலாஷ் கெர், ஹம்பி நிகழ்ச்சியில்பாடும்போது இந்திப் பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். அப்போது கன்னடப் பாடல்களை பாடுமாறு ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கைலாஷ் கெர் இந்தி பாடல்களையே தொடர்ந்து பாடியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாடகர் கைலாஷ் கெர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக, அந்த பாட்டில் பாடகர் மீது படாமல் அவரை தாண்டி மேடையில் விழுந்துள்ளது. ஆனால், அப்போதும் கூட கைலாஷ் கெர் மிகுந்த ஆணவத்துடன், கர்நாடக மக்களின் உணர்வை மதிக்காமல் தொடர்ந்து ஹிந்தி பாடலை நிறுத்தாமல் பாடியுள்ளார். மேலும், மேடைக்கு வந்த ஹம்பி போலீசார் தண்ணீர் பாட்டிலை வீசி நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசாரும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்தி பாடல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் பாட்டில் வீசிய சம்பவத்தில், பிரதீப் (22), சுரேந்தர் (21) ஆகிய 2 பேரை கர்நாடக போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பை சேர்ந்த அந்த இருவரும், ஹம்பி உத்சவத்தில் கன்னட பாடல் பாடப்படாததாலேயே பாட்டில் வீசினோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.