அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவரும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் 30 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கி தருவதாகக் கூறி, தன்னிடம் ரூ.3 கோடி வாங்கி ஏமாற்றி விட்டதாக அதிமுக ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது 406, 420, 506 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்றைய தினமே ராஜேந்திர பாலாஜி தலைமறைவானாா். அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.மனோகா் நியமித்து தேடும் பணியில் ஈடுபடுத்தினார்.
இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் தங்கியிருந்த தகவலை அறிந்த தமிழக காவல்துறையினர், இன்று கைது செய்தனர்.