ஒடிசாவில், 58 வயதாகும் எம்.எல்.ஏ ஒருவர் 40 வருடங்களுக்குப் பிறகு 10-ஆம் தேர்வெழுதி உள்ளார்.
ஒடிசாவில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு தயாரான பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கன்ஹர் ஒடிசா மாநிலத்தில் உள்ள ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வெழுதினார்.
தேர்வு அறைக்கு செல்லும் முன்னர் பேசிய கன்ஹர், ``நான் 1978-ல் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போதிருந்த சில குடும்ப பிரச்னைகளின் காரணமாக என்னால் தேர்வு எழுதமுடியாமல் போனது. இப்போதெல்லாம், 50 வயது ஏன் அதற்கு மேற்பட்ட வயதில் கூட பலரும் தேர்வெழுதுகிறார்கள். அதனால், நானும் தற்போது தேர்வெழுதலாம் என்று முடிவு செய்தேன். இங்கு தேர்வு எழுதவோ, கல்வி கற்கவோ வயது ஒருபோதும் தடையே இல்லை" என கூறினார்.